|
12. வென்றியொடு நெடும்புகழ் விளைக்குமென்றிறைவன்
தொன்று வந்த தோன்மலிபுரைத்தற்குச்
செய்யுள்:-
“நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
யின்றுநாம் வைக லிழிவாகு-மென்றொளிறும்
பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம்
வேண்டி லெளிதென்றான் வேந்து” [பு. வெ. உழி. 12]
எனவரும். பாண்டில் - கண்ணாடி. தோல் ஈண்டு ஆகுபெயர்.
13. கருதார்காக்குங் கடிமதிற்குமரிமேல் ஒருதானாகி
உடன்றகுற்றுழிஞைக்குச்
செய்யுள்:-
“குளிறு முரசினான் கொண்டா னரணங்
களிறுங் கதவிறப் பாய்ந்த-வொளிறு
மயிற்றுப் படைந்த வணியெழு வெல்லா
மெயிற்றுப் படையா லிடந்து” [பு. வெ. உழி. 13]
எனவரும்.
14. வளையினமொலிப்ப வயிர்கிளர்ந்தார்ப்ப மிளைபிறக்கொழிய
விரைந்த பக்கத்திற்குச்
செய்யுள்:-
“அந்தரந் தோயு மமையோங் கருமிளை
மைந்தர் மறிய மறங்கடந்து-பைந்தார்
விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார்
வரைமார்பின் வைகின வாள்” [பு. வெ. உழி. 14]
எனவரும். வில்-வின்னாண். தூவுவார்தூவாரென விகாரம்பெற்று நின்றது.
15. பாடருந்தோற்படை ஈடுசான்மறவர் ஆடலோடடைந்த
பக்கத்திற்குச்
செய்யுள்:-
“நிரைபொறி வாயி னெடுமதிற் சூழி
வரைபுகு புள்ளின மான-விரைபடைந்தார்
வேலேந்து தானை விறலோன் விறன்மறவர்
தோலேந்தி யாட றொடர்ந்து” [பு. வெ. உழி. 15]
எனவரும். பொறி, நூற்றுவரைக் கொல்லி முதலிய இயந்திரங்கள். |