மக்கள் 8. | வெற்பன் குறவர் விடலை யெயினர் ஒற்கமில் குறும்பொறை நாடன் குடவர் மகுண னுழவர் சேர்ப்பன் பரதவர் இனையன பிறவு மக்கட் பெயரே. |
(எ-து.) மக்கட்பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெற்பன், விடலை, குறும்பொறைநாடன், 1மகுணன், சேர்ப்பன் என்பன தலைமகன் பெயர், குறவர், எயினர், குடவர், உழவர், பரதவ ரென்பன அந்நிலத்து வாழ்வார் பெயர் என்றவாறு. பிறவுமென்றதனாற் பொருப்பன், மலையன், சிலம்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், இறவுள ரெனவும்; காளை, விடலை, எயினர், எயிற்றி, மறவ ரெனவும்; அண்ணல், மீளி, இடைச்சியர், ஆய்ச்சியர், கோவலர், இடையர், பொதுவர், ஆயரெனவும்; ஊரன், கிழத்தி, மனைவி, கடையர், கடைசிய ரெனவும்; கொண்கன், துறைவன் துறைவி, பரத்தி, நுளையர், நுளைச்சியரெனவும் வருவனவெல்லாம் கொள்க.(8) செயல் 9. | நிறைத்தே னழித்தலு நெறிச்சென் றலைத்தலும் 2ஒருக்கின மோம்பலு முழவொடு பயிறலும் திரைக்கடற் சேறலோ டினையன செயலே. |
(எ-து.) செய்தியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தேனழித்தலும், ஆறலைத்தலும், நிரைமேய்த்தலும், உழுதலும், கடலூடு புகுதலும் என்றிப் பெற்றியெல்லாம் ஆண்டைச் செய்தியாம் என்றவாறு. இனையன என்றதனால் தினையரிதலும், கிழங்கு அகழ்தலும்; ஊரெறிதலும், நிரைகோடலும்; வரகரிதலும், ஏறுகோடலும்; விழவயர்தலும், புனலாடலும்; உப்பாக்குதலும், முத்துக் குளித்தலும் உள்ளிட்டன வெல்லாங் கொள்க.(9) 1. மதுரைக் கோவையென்னும் நூலில் மகுணன் என்னும் சொல்லாட்சி மிகுதியாகக் காணப்படுகிறது. 2. ஒருக்கினம் = ஒருக்கு+இனம்-சேர்க்கப்பட்ட மூவினம்; ஆடு, பசு எருமையென்பன. |