மூன்றாவது
பொருளதிகாரம்1
பொருட்படலம்2
86. பொருள்களின் தொகை
ஆற்று மகமே புறமே யகப்புற மன்றிவென்றி
போற்றும் புறப்புற மென்றாம் பொருள்;அளப் பானளவை
ஏற்றும் பிரமேய மென்றும் வகுப்பர்; இவையுமன்றிச்
சாற்றும் புலவரு மெண்ணிறந் தாரென்பர் தாழ்குழலே !
(இ-ள்.) பொருளாவது அகப்பொருளும், அகப்புறப் பொருளும், புறப்பொருளும், புறப்புறப் பொருளும் என நான்கு வகைப்படும்; அளப்பானும், அளவையும், அளக்கப்படும் பொருளும் என மூன்று வகைப்படும் என்பாருமுளர்; மற்றும் பல வேறுபாட்டாலும் வகுப்பாரும் உளர் (எ-று.)
'பிரமேயம்' என்பது அளக்கப்படும் பொருள்.
(1)
87, 88. மேற்கூறிய பொருள்களின் வகை
முல்லை குறிஞ்சி மருதத் தொடுமுது பாலைநெய்தல்
சொல்லிய காஞ்சி சுரநடை கைக்கிளை பாலைதும்பை
இல்லவண் முல்லை தபுதாரந் தாபத மேய்ந்தவள்ளி
அல்லது காந்தள் குறுங்கலி வெட்சி யடல்வஞ்சியே.
குற்றிசை வாகை கரந்தை பெருந்திணை கொற்றநொச்சி
பற்றிய பாசறை முல்லை யுழிஞை யெனப்பகர்ந்த
மற்றிவை யையைந்து மாம்பொருள் நான்கினும் வண்புகட்சி
பற்றிய பாடாண் பொதுவிய லாதியும் பார்த்தறியே.
(இ-ள்.) முல்லையும், குறிஞ்சியும், மருதமும், பாலையும், நெய்தலும், காஞ்சியும், சுரநடையும், கைக்கிளையும், முதுபாலையும், தும்பையும், இல்லாண்முல்லையும், தபுதாரமும், தாபதமும், வள்ளியும், காந்தளும், குறுங்கலியும், வெட்சியும், வஞ்சியும், குற்றிசையும், வாகையும், கரந்தையும், பெருந்திணையும், நொச்சியும்,
1. இது பொருள் இலக்கணத்தைக் கூறும் படலம் என்றாம்.
2. இது பொருளைக் கூறும் படலம் என்றாம்.