மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணிமாலை
   
36. முன்னா சிரியம்பின் வெண்பாக் கலித்துறை முப்பதென்று
சொன்னார்கள் மும்மணிக் கோவைக்கு மும்மணி மாலை
                                    [சொல்லின்
அந்நான் மறைப்பாக் கலித்துறை யாசிரி யம்விருத்தம்
இந்நால் வகைச்செய்யு ணாற்பது நான்மணி
                                 மாலையென்னே.

     (உரை I). எ - ன், முன் ஆசிரியம் வந்து பின் வெண்பா
வந்து பின் கலித்துறை வந்து இவ்வாறே முப்பது பாட்டான் முடிவது
மும்மணிக் கோவையாம்; வெண்பா வந்து பின் கலித்துறை வந்து
ஆசிரிய விருத்தம் பின் வந்து முன்போலே முப்பதான் முடிவது
மும்மணி மாலையாம்; வெண்பா வந்து பின் ஆசிரியம் வந்து பின்
விருத்தம் வந்து பின் கலித்துறை வந்து இவ்வாறே நாற்பது பாட்டான்
முடிவது நான்மணி மாலையாம் எ - று.

“ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்ப
தாக வருவது மும்மணிக் கோவை.”

“வெள்ளைக்களித்துறை யாசிரிய விருத்தம்
புல்லும் முப்பதும் மும்மணி மாலை.”
“வெண்பா வாசிரியம் விருத்தம் கலித்துறை
ஒண்பா நான்கும் நான்மணி மாலை.”
 
- செய்யுள் வகைமை

     இவை எல்லாம் அந்தாதியாக மண்டலித்து முடிவன.

     (உரை II). .....................ஆசிரியப்பாவும் வெண்பாவும்
கலித்துறையும் ஆசிரிய விருத்தமும் மாறி மாறி வந்து அந்தாதியாக
நாற்பது பாட்டால் முடிவது நான்மணி மாலையென்று வழங்கப்படும்
எ - று.

    (கு - ரை.) நான்மறைப்பா - அந்தணர்க்குரிய வெண்பா;
பாக்களுக்குரிய சாதிகளை 81-ஆம் சூத்திரத்திற் காணலாம். சில
பிரபந்தங்களில் இந்த முறை பிறழ்ந்தும் வரும். (11)