அரசன் விருத்தம்
   
51. *அரசன் விருத்தங் கலித்துறை யீரைந் தகன்மலைமேல்
விரவிய நாடு நகர்சிறப் பாய விருத்தமுப்பான்
உரைசெய் கலித்தா ழிசையும்வாண் மங்கலம் ஓதுவது
புரவல ராயவர்க் காமென் றுரைப்பர் புலவர்களே.

     (உரை II). எ - து பத்துக் கலித்துறையும், முப்பது
விருத்தமும், கலித்தாழிசையுமாக மலை [கடல்] நாடு வருணனையும்,
நகர் வருணனையும் [நிலவருணனையும்] பாடி, வாள்மங்கலமும்
தோள் மங்கலமும் பாடி முடிப்பது அரசன் விருத்தமென்னும்
பிரபந்தமாம் எ - று. இது முடிபுனைந்த மன்னர்க்குப் பாடுவது.

     (கு - ரை). அரசன் விருத்தத்தைப்பற்றிய குறிப்பு வெண்பாப்
பாட்டியல் முதலிய பழைய பாட்டியல்களில் இல்லை. பிரபந்ததீப
ஆசிரியர், நவநீத நடனார் கூறியபடியே இப்பிரபந்த
இலக்கணத்தைக் குறிக்கிறார்; ‘அரசன் விருத்தமே ஐயிரு கலித்துறை,
விருத்தமுப்பான் வெண்கலித் தாழிசை, இவற்றா லிறைவ னெழிலூர்
மலை கடல், வாண்மங் கலந்திண் டோள்மங் கலமுதல், வருணனை
யெல்லாம் வகுத்துப் பாடலே’ என்பது அது. (26)