பக்கம் எண் :

174நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

வேந்தனைமுன் வாழ்த்தினார் வெட்சி முனைஞரவன்
ஈந்தபொருட் பாதிடுவா ரின்று. ”

(பாதிடுதல் = பங்கிடுதல்)

உண்டாட்டு = வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல்;

“முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்
 தெறிப்ப விளைந்த தீங்கந் தார
 நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு
 பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
 வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
 புலம்புக் கனனே . . . . . . . ”

(புறம். 258)

(கந்தாரம் = ஒருவகை மது. தலைச்சென்று = முன்சென்று. )

கொடை = வென்று கொண்டோர், துடியன், கணி, பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்துவத்தல்;

“இளமா எயிற்றி! இவைகாண் நின்ஐயர்
 தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
 கொல்லன் துடியன் கொலைபுணர் சீர்வல்ல
 நல்லியாழ்ப் பாணர் தம்முன்றில் நிறைந்தன. ”

(வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்)

“. . . . புல்லணற் காளை
யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும். ”

(புறம். 258)

என வந்த ஈரேழ் வகையிற்றாகும் = என்று இவ்வாறு எண்ணப்பட்ட பதினான்கு வகைப்படும் (வெட்சித்துறைகள்).

குறிப்பு: செலவே, வேயே, மாற்றே என்பனவற்றுள் ஏகாரம் அசைநிலை; எண் ணேகார மெனினும் அமையும். வெட்சித் துறை யென்பது மேற்சூத்திரத்தி னின்றும் அவாய்நிலை எழுவா யாயிற்று.