திணை : பாலை.

    துறை : இஃது, உடன்போக்குந் தோழி கையடுத்தது.

     (து - ம்.) என்பது, தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, வைகிருளிலே தலைவியைத் தலைவன்பாற் சேர்த்துக் கையடுத்தல் செய்து, இருவரையும் வலஞ்செய்து நின்று நின் மாறுபடாத மொழியைத் தெளிந்து புகல்புக்க இவளை முதுமையெய்தினும் கைவிடாது பாதுகாப்பாயாக வெனத் தலைமகனுக்கு ஓம்படுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, “தலைவரும் விழுமம்” (தொல்-அகத்- 35) என்னும் நூற்பாவின்கண் "விடுத்தற்கண்ணும்" என்னும் விதிகொள்க.

    
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் 
    
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த 
    
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்  
    
நீத்த லோம்புமதி பூக்கே ழூர! 
5
இன்கடுங் கள்ளி னிழையணி 1 நெடுந்தேர்க் 
    
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் 
    
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
    
பழையன் வேல்வாய்த் தன்னநின்
    
பிழையா நன்மொழி 2 தேறிய இவட்கே

     (சொ - ள்.) பூக் கேழ் ஊர - மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே !; இன் கடுங் கள்ளின் இழையணி நெடு தேர் கொற்றச் சோழர் - இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்களையுமுடைய வலிமிக்க

     (வி - ம்.) அண்ணாத்தல் - நிமிர்தல். வனம் - அழகு. மதி: முன்னிலையசை. கடுங்கள் - முற்றிக் கடுப்பேறிய கள். தேறுதல் - தெளிதல். பழையன் வேல்தப்பாதவாறு நின் தப்பாத சொல்.

     "எஞ்ஞான்றும் மூப்புப் பிணி சாக்காடின்றி இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய், இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய், ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும், ஒத்த செல்வமும் ஒத்த கல்வியுமுடையராய்ப் பிறிதொன்றற்கு ஊனமின்றிப் போகந்துய்ப்பார்" என்றதற்கு மாறாக இவள்காட்டவே. ஒருகால் "தளரினும் முடிப்பினும்" என உம்மைகொடுத்துக் கூறினார்; அவ்வண்ணங் கூறியதும் அவன் கைவிடாது காத்தற்பொருட்டேயாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஓம்படுத்துரைத்தல். இதனை இத்துறைக்கே மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 39. உரை.)

     (பெரு - ரை.) கொடித் தேர் என்றும், போஒர் கிழவோன் பழையன் என்றும் பாடம். இவற்றிற்கு நிரலே, கொடியையுடைய தேர் என்றும் போர்த் தொழிலையே தனக்குரிமையாகவுடையோனாகிய பழையன் என்றும் பொருள் கூறுக.

(10)
 (பாடம்) 1.  
நெய்த்தோர் வல்லியம்;
  2. 
தேரிய.