திணை : குறிஞ்சி.

    துறை : இது, காமமிக்க கழிபடர்கிளவி.

    (து - ம்,) என்பது, இருவகைக் குறியானும் வந்தொழுகுந் தலைமகன் இடையீடுபட்டு வாராதொழியக்கண்ட தலைமகள் வரைதல் விருப்பினளாய் வேட்கை பெரிதுஞ் சிறப்பச் சிந்தித்துக் கிளியை நோக்கி கிள்ளாய்! என் தலைவரது நாட்டிலுள்ள நின் சுற்றத்தாரிடஞ் சென்றகாலை ஆங்கு என் காதலரை நோக்கி இம்மலைக்குறவர் மகள் மீட்டும் தினைப்புனங்காவல் செய்யுமாறு வந்தனளென இவ்வொன்றனை மட்டுஞ் சொல்வாயாகவென்று இரந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு. "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

    
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி 
    
அஞ்ச லோம்பி ஆர்பதங் கொண்டு 
    
நின்குறை முடித்த பின்றை என்குறை 
    
1செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் 
5
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு 
    
நின்கிளை மருங்கிற் சேறி யாயின் 
    
அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக் 
    
கானக் குறவர் மடமகள் 
    
ஏனல் காவல் ஆயினள் எனவே. 

    (சொ - ள்.) கொடுங் குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி - வளைந்த தினைக் கதிர்களைக் கொய்துகொண்டு போகாநின்ற சிவந்த வாயையுடைய பசிய கிள்ளாய்; அஞ்சல் ஓம்பி ஆர்பதம் கொண்டு நின் குறை முடித்த பின்றை - அஞ்சாதே கொள்! நீ இக்கதிர்களைக் கொய்தல் காரணமாக யாரேனும் நின்னை அச்சுறுத்துவார் கொல்லோ? என்னும் ஐயத்தைப் போக்கி ; வேண்டிய உணவைக் கொண்டுநின் குறையெல்லாம் முடித்த பின்பு; என் குறை செய்தல்வேண்டும் கைதொழுது இரப்பல் - ஒழிவெய்திய காலத்தில் என்னுடைய குறைபாட்டைச் செய்து முடிக்க வேண்டும். இது நின்னை யான் என் கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கேட்கின்றேன்; பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு நின் கிளை மருங்கின் சேறி ஆயின் - அக்குறைபாடுதான் யாதோவெனின் பலவாய காய்களைக் காய்க்கின்ற பலா மரங்கள் மிக்க சாரலையுடைய அவர் நாட்டின்கணுள்ள நின் சுற்றத்தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின்; அம் மலை கிழவோர்க்கு இம் மலைக் கானக் குறவர் மடமகள் - அம்மலைக்கு உரியராகிய எனது காதலரை நோக்கி இந்த மலையைச் சூழ்ந்த காட்டின்கணுள்ள குறவருடைய இளமகள் முன்போலவே; ஏனல் காவல் ஆயினள் என உரை - தினைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாளென்று இவ்வொன்றனை மட்டும் உரைத்து என் இவ்வொரு குறையைச் செய்துமுடிப்பாயாக ! எ - று.

    (வி - ம்.) குரல் - கதிர். ஆர்பதம் - உணவு. கோள் - காய்.

    சொல்லென ஏவியவழி மறுக்குங்கொல்லோ, உடன்படுங்கொல்லோ வென்னும் ஐயுறவால் கிளைமருங்கிற் சேறியாயினென்றாள். அது மறாமற் செய்தற்பொருட்டு இரப்பரென்று தன்னைத் தாழ்த்தியும் தொழுதென அதனை யுயர்த்தியுங் கூறினாள். ஆயினளெனவுரை யென்றது தூதுமுனிவின்மை.

    இறைச்சி :- என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கணுள்ள பலாமரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியதறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) ஆர்பதம் : வினைத்தொகை. அவர் மலைச்சாரற்குச் செல்வாயாயின் இத்தினையினும் இனிய பலாச்சுளையை ஆர்பதமாகப் பெறலும் பெறுகுவையென ஆண்டுச் செல்லுதற்கோர் ஊதியமும் கூறுவாள் பல்கோட் பலவின் சாரல் அவர் நாடென்றாள் என்க.

(102)
  
 (பாடம்) 1. 
சொல்லல்வேண்டுமார்.