(து - ம்,) என்பது, பொருள்வயிற் பிரிந்து சுரத்தின்கட் சென்ற தலைமகன் தலைவியைக் கருதி மீளலுற்ற நெஞ்சினை நோக்கி, நெஞ்சமே, நீ முதலிலே காடு கடுமையதென்னாமல் நம் காதலி அங்கு வருந்தும்படி புறப்பட்டு நெடுந்தூரம் வந்துற்றனை: இன்று மீளலுறுவையாயின் நின் முயற்சி நன்று கண்டாய்; இங்ஙனமே நீ வாழ்வாயாகவென இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "கரணத்தினமைந்து முடிந்தகாலை" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் வரும் 'மீட்டுவரவு ஆய்ந்த வகையின்கண்ணும் என்னும் விதி கொள்க.
| முளிகொடி வலந்த முள் அரை இலவத்து |
| ஒளிர்சினை அதிர வீசி விளிபட |
| வெவ்வளி வழங்கும் வேய்பயில் மருங்கின் |
| கடுநடை யானை கன்றொடு வருந்த |
5 | நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண் |
| அருஞ்சுரக் கவலைய என்னாய் நெடுஞ்சேண் |
| பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் |
| குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை |
| வண்டுபடு வான்போது கமழும் |
10 | அஞ்சில் ஓதி அரும்படர் உறவே. |
(சொ - ள்.) நெஞ்சே முளி கொடி வலந்த முள் அரை இலவத்து ஒளிர் சினை அதிர வீசி - நெஞ்சே ! காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியையுடைய இலவமரத்தின் விளங்கிய கிளைகள் நடுங்கும்படி வீசி; விளிபட வெவ் வளி வழங்கும் வேய்பயில் மருங்கில் - அவை முறியுமாறு கொடிய காற்று மோதியடிக்கின்ற மூங்கிற்புதர் நெருங்கிய இடங்களிலே; கடு நடை யானை கன்றொடு வருந்த நெடுநீர் அற்ற நிழல் இல் அருஞ்சுரம் கவலைய ஆங்கண் என்னாய் - கடிய செலவினையுடைய பிடிகள் தத்தங் கன்றுகளுடனே சேர வருந்தாநிற்ப நெடிய நெறி முழுதும் நீரில்லாதொழிந்த நிழல் அற்ற செல்லுதற்கரிய சுரத்தின்கணுள்ள கவர்த்த நெறிகளையுடைய அவ்விடமென் றெண்ணாயாய்; குட்டுவன் குடவரைச் சுனைய மா இதழ்க் குவளை வண்டுபடு வான் போது கமழும் அம் சில் ஓதி அரும் படர் உற - குட்டுவன் சேரலது குடமலைச் சுனையிலுள்ள கரிய இதழையுடைய குவளையின் வண்டு மொய்க்கும் பெரிய மலரைச் சூடுதலானே மணங்கமழ்கின்ற அழகிய சிலவாய கூந்தலையுடைய நங் காதலி நீங்குதற்கரிய துன்பத்தாலே வருந்தவிட்டு; நெடுஞ் சேண் பட்டனை - நீதான் நெடுந்தூரம் வந்துற்றனை; வாழிய - இங்குப் போந்த பின்பு கருதி மீளலுறாநின்றனையாயின் நின் முயற்சி நனி நன்றாயிரா நின்றது, இத்தகைய முயற்சிகளோடு நீ நீடு வாழ்வாயாக !; எ - று.
(வி - ம்.) முளிதல்-காய்தல். வலத்தல்-சுற்றுதல். வழங்குங் கவலைய ஆங்கணெனக் கூட்டுக. கவலை ஆங்கணென்னாய் பட்டனை யென்றதனாலே மீளக் கருதா நின்றனையெனக் கொள்ளக்கிடந்த தறிக.
காதலி படருறுமாறு விட்டுச் சேட்பட்டனை யென்றது ஒன்றினேம் யாமென்றுரைத்தாரைத் தோள் நெகிழவிட்டதன் பயனாக நீ இக்கொடிய காட்டில்வந்து துன்புறா நின்றனை யென்றானென்பது.
இறைச்சிகள் :- (1) இலவத்தின் கிளை முறியுமாறு காற்றுவீசி மோதா நிற்குமென்றது, நீ கருதியவெல்லாம் கெடும்படியாக காமந் தலையெடா நின்றதென்றதாம்.
இறைச்சிகள் :- (2) யானை கன்றொடு வருந்துமாறு நீரற்ற சுரமென்றது, யான் நின்னோடு சேர வருந்துந்தன்மைத்து இவ்விடமென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - இடைச்சுரத்தழுங்கல்.
(பெரு - ரை.)வலந்த - பின்னிய. தலைவியோடு பாயல் கொண்டிருந்தமை நினைதலர் 'குவளைவான் போது கமழும் அஞ்சில் ஓதி' என்றான்.
(105)