(து - ம்,) என்பது, தலைவன் பிரிதலாலே தலைமகள் வருந்துவதறிந்த தோழி அவன் வருதற்கறிகுறியாகிய நன்னிமித்தந் தோன்ற அது கொண்டு தலைவியை நோக்கி 'நமது பாக்கம் கல்லென்றொலிக்கும்படி கொண்கனது தேர் வருமாதலின் நீ வருந்தாதேகொள்'ளென அவள் தெளிந்து ஆற்றியிருக்குமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 1 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| அத்த இருப்பைப் பூவின் அன்ன |
| துய்த்தலை இறவொடு தொகைமீன் பெறீஇயர் |
| வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர் |
| மரன்மேற் கொண்டு மான்கணந் தகைமார் |
5 | வெந்திறல் இளையவர் வேட்டெழுந் தாங்குத் |
| திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி |
| வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி |
| நிணம்பெய் தோணியர் இகுமணல் இழிதரும் |
| பெருங்கழிப் பாக்கங் கல்லென |
10 | வருமே தோழி கொண்கன் தேரே. |
(சொ - ள்.) தோழி அத்தம் இருப்பைப் பூவின் அன்ன துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் - தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; வரி வலைப் பரதவர் கருவினைச்சிறார் - பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரன் மேற்கொண்டு மான்கணந் தகைமார் வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு - மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி - மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் - ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெருங் கழிப்பாக்கம் கல்லென கொண்கன் தேர் வரும் - பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் ! எ - று.
(வி - ம்.) வரிவலை - கட்டிய வலை. கருவினை. கருமை வன்மை; ஈண்டுப் பாவ வினையன்று, மரபுக்குரிய தொழிலைச் செய்வதனால். கெண்டுதல் - வெட்டுதல். இகுதல் - சொரிதல். சுறாமீன் கொம்பை வெட்டி ஆண்டே கடலிற் போகடலானும் ஏனைப் பெருமீன்களைத் தறித்துக் கொணர்தலானும் வழக்குண்மை யறிக. சிறார் திமில்மேற்கொண்டென்க. திமில் - மீன் பிடிக்கும் படகு. விரிச்சி - நிமித்தம்.
இறைச்சி :- சிறார் திரைச்சுரத்திற்சென்று பிடித்துக்கொணர்ந்த மீனினங்களை மணலின்கண் இறக்கியிடுமென்றது தலைவர் வேற்றுநாட்டிற் சென்று ஈட்டிக்கொணர்ந்த பொருளெல்லாம் நமதில்லகத்தே பரப்பாநிற்பர்காணென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை யாற்றுவித்தல். கைகோள் - கற்பு.
(பெரு - ரை.) மான்கணந் தகைமார் என்ற குறிப்பால் வெந்திறல் இளையவர் என்றது வேட்டுவச் சிறுவர்க்காயிற்று. வேட்டுவச் சிறுவர் பரதவர் சிறுவர்க்குவமை.
(111)