திணை : குறிஞ்சி.

    துறை : இது, பருவவரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

    (து - ம்,) என்பது, வினைவயிற் பிரியுந் தலைவன் குறித்துச்சென்ற பருவம் வருதலும் அவன் வாராமையறிந்து ஆற்றாத் தலைவியை ஆற்றுவிக்குந் தோழி "அவன் வருதலையறிந்து கடலினீரை ஆவிவடிவாக வாங்கிப் பருகி மின்னியிடித்துப் பெய்யத் தொடங்கிய மழைக்கு யான் யாது கைம்மாறு செய்ய வல்லே" னென வலியுறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனையும் மேற்செய்யுட்கோதிய "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக்கொள்க.

    
விருந்தெவன் செய்கோ தோழி சாரல் 
    
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச் 
    
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு 
    
உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும் 
5
பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி 
    
மாக்கடல் முகந்து மணிநிறத் தருவித் 
    
தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய் 
    
மலையிமைப் பதுபோல் மின்னிச்  
    
சிலைவல் ஏற்றொடு செறிந்தஇம் மழைக்கே. 

    (சொ - ள்.) தோழி சாரல் அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச் சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப - தோழீ ! மலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கையின்கண்ணே சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ள வெல்லாம் அஞ்சும்படியாக; களிறு அட்டு உரும்பு இல் உள்ளத்து அரி மா வழங்கும் பெருங் கல் நாடன் - களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் இயங்கா நிற்கும் பெரிய மலைநாடன்; வரவு அறிந்து விரும்பி - கார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று; மா கடல் முகந்து மணிநிறத்து அருவி தாழ்நீர் நனந்தலை அழுந்து படப் பாஅய் - கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலை இமைப்பது போல் மின்னிச் சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கு - மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; விருந்து எவன் செய்கு - யான் யாது கைம்மாறு செய்ய மாட்டுவேன் ? எ - று.

    (வி - ம்.) விருந்து - புதுவதாகச் செய்யு முகமனுமாம். உருப்பு - அச்சம்: எதுகை நோக்கி மெலிக்கும் வழி மெலித்தது. நனந்தலை - அகன்றவிடம். அழுந்துபடல் - மூடப்படுதல்.

    பகுத்தறிவில்லாத முகிலும் அவன் வருவதறிந்து விரும்பி வருதலைக் கண்டுவைத்தும் எல்லாவறிவுமுடைய நீ அவன் வருகையை யறியாது புலம்புகின்றனையே யென்று இரங்கியவாறாயிற்று.

    இறைச்சி :- அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்குமென்றது நினது பசப்பு வருந்திக்கெட உனக்குண்டாகிய காமநோயைப் போக்கி நின் தலைவன் நின்மாட்டு அகலாது பலகாலு முயங்காநிற்கு மென்றதாம். கைகோள் இரண்டற்கும் பொது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) கார்ப்பருவத்தே மீண்டு வருவல் என்று கூறிப் பிரிதல் களவிற் கேலாமையின் இதற்குக் கைகோள் கற்பு என்றே கொள்க; இரண்டற்கும் பொதுவெனல் பொருந்தாமை யுணர்க.

    இனி, களிறட்டு உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும் நாடன் என்றது குறிப்பானே அவன் போர் கருதிப் பிரிந்து சென்றமையையும் போரின்கண் தன் பகைவரை யெல்லாம் கொன்று வெற்றி வீறுடன் மீண்டு வருவன் காண் என்பதும் தோற்றுவித்தமை யுணர்க. அழுந்துபட - ஆழ்ந்துபட என்பதன் விகாரம்; நீருள் ஆழ்ந்து மறைய என்பது பொருள் என்க.

(112)