திணை : பாலை.

     துறை : இது, தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.

     (து - ம்.) என்பது, கொண்டுதலைக் கழியுமாறு உடன்படுத்திய தோழி செவிலியுழைச்சென்று அறத்தொடு நிற்றலாலே பெரிதும் மாட்சிமைப்பட்டுக் காட்டலும் இவள் நீரில்லாத ஆற்றிடைப்போய் வருந்துங் குறை யென்னை யென்று தலைமகளைச் செலவழுங்குவித்துத் தலைமகனிடஞ் சென்று, 'தலைவி நின்பால்வர உடன்பட்டும் தன் சிலம்பு முதலியவற்றைக் கழற்றி வைக்கும்பொழுது இவற்றைக் காண்டலும் தோழியர் நோவரென்று ஆயத்தாரைப் பிரிதலாலே வருந்தி நின்றனள்' என அவன் செலவழுங்குமாறு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, 'தலைவரும் விழுமம்' என்னும் நூற்பாவின்கண்(தொல்-அக- 39.) போக்கற் கண்ணும் என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
விளம்பழங் கமழுங் கமஞ்சூழ் குழிசிப்  
    
பாசந் தின்ற தேய்கான் மத்த  
    
நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும்  
    
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கா  
5
லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
    
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்  
    
இவைகாண் தோறு நோவர் மாதோ  
    
அளியரோ வளியரென் னாயத் தோரென  
    
நும்மொடு வரவுதா னயரவுந்  
10
தன்வரைத் தன்றியுங1 கலுழ்ந்தன கண்ணே.  

     (சொ - ள்.) விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி - முடை தீர விளம்பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்த்தாழியில; பாசம் தின்ற தேய்கால் மத்தம் நெய் தெரி இயக்கம் - கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினையுடைய மத்திட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால்; வெளில் முதல் முழங்கும் - தறியடியில் ஓசை முழங்குகின்ற; வைகுபுலர் விடியல் - தங்கிய இருள் தீரும் வைகறைப் பொழுதில்; மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு கழீஇ - தன்மெய் பிறர்க்குத் தோன்றாதபடி மறைத்துத் தன் காலிலணியும் பருக்கைக்கற் போகடப்பட்ட சிலம்பைக் கழற்றி; பல் மாண் வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள் - பல மாட்சிமைப்பட்ட வரிந்த புனைந்த பந்தோடு சேர ஓரிடத்தில் வைக்கச் செல்பவள்; இவை காண்தோறும் நோவர் அளியரோ அளியர் என - என் தோழிமார் இவற்றைக் காணுந்தோறும் நோவாநிற்பர், அவர் இரங்கத் தக்காரல்லரோ என்று கருதி; நும்மொடு தான் வரவு அயரவும் - நும்மோடு தான் வருதலை மேற்கொண்டொழுகா நிற்பவும்; கண் தன் வரைத்தன்றியும் கலுழ்ந்தன - அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்காமல் அழா நின்றன; ஆதலின் நுமக்கு ஏற்றவாறு செய்ம்மின்; எ - று.

     (வி - ம்.) குழிசி - தாழி. இயக்கம் - அசைவு. வெளில் - தயிர் கடைதற்கு நட்ட தூண். பகற்பொழுதிற் கடைவுழி வெப்பந் தாங்காது வெண்ணெய் உருகுமாதலின் வைகறையில் கடைதல் கூறிற்று.

    ஒலிகேட்டு அன்னை முதலானோர் விழித்தாற் போக்கிற்கியலாதென்பதுபற்றிச் சிலம்பு கழற்றினமை கூறினாள்.இதுகேட்டுச

் செலவழுங்கி நின்றானை நீ வரைந்து புகுதக; நினக்கு வரைவு மாட்சிமைப்படுமென்றலின் கேட்ட தலைவன் இவள் அறத்தொடு நிற்றலான் மாட்சிமைப்பட்டது போலுமெனப் பிற்றைஞான்று வரைவொடு புகுவானாவது இது "வெளிப்பட்ட பின்றையு முரிய கிளவி" (இறையனார்- 23) என்றதனாற் பெறப்பட்டது. தோழி சென்று அறத்தொடு நிற்றலை, "காமற் கடும்புனல்" (கலி. 39) என்ற செய்யுளின் 'சாய்த்தார்தலை' என்றதன்காறுங் கண்டு கொள்க. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல். இதனைப் போக்குதல் தவிர்ந்ததற்கு மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொல்-பொ- 39 உரை.)

     (பெரு - ரை.) நன்கு பதமறிந்து பாலைக் காய்ச்சிப் பிரையிட்டுத் தோய்த்த தயிர்த்தாழி இயல்பாகவே விளம்பழம் போன்று மணங்கமழும் என்பது பற்றி விளம்பழம் கமழும் குழிசி என்றார். பதனறிந்து தோய்ந்த தயிர்த் தாழி முடை நாறுதலின்று ஆகலின் விளம்பழம் கமழும் என்பதற்கு விளம்பழம் போன்று இனிதாக மணங்கமழும் குழிசி என்னலே அமைவுடைத்து, இயக்கம் முழங்கும் என்க. கமம் - நிறைவு. "கமம் நிறைந்தியலும்" என்பது தொல்காப்பியம். தயிர்த் தாழி சூற்கொண்ட வயிறு போலப் பருத்திருத்தல் பற்றிச் சூற்குழிசி என்றார். தன் வரைத்தன்றியும் என்றதற்கு அவள் வரைத்தன்றியும் எனப் பொருள் கோடல் சிறப்பு.

(12)
  
 (பாடம்) 1. 
கலிழ்ந்தன.