திணை : மருதம்.

     துறை : இது, விருந்துவாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்தவன் தலைவியின் ஊடலைத் தணிக்கப் பெறானாய் விருந்தொடு புகுதக்கண்டு அவள் தன் ஊடலையடக்கி விருந்தெதிர் கொண்டாளாக, அதனை நோக்கிய அத்தலைமகன் இவள் பரிகலந்திருத்தி அட்டிலிடத்தாளாயினள்; இதற்குக் காரணம் இவ்விருந்தே யாதலின் இஃதெஞ்ஞான்றும் வந்துதவுவதாக, வந்தால் இவளின் முயக்கத்தைப் பெறுதற்குரிய இனிய முகத்தைப் பார்ப்போமென்று மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "கரணத்தின் அமைந்து முடிந்தகாலை" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் "நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும்" என்னும் விதிகொள்க.

    
தடமருப்பு எருமை மடநடைக் குழவி 
    
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில் 
    
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் 1 பேதை 
    
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப 
5
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் 
    
புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் 
    
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் 
    
அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து 
    
அட்டி லோளே அம்மா அரிவை 
10
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாளன்று 
    
சிறியமுள் எயிறு தோன்ற 
    
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே. 

     (சொ - ள்.) தட மருப்பு எருமை மட நடைக் குழவி தூண்தொறும் யாத்த காண்தகு நல்இல் - வளைந்த கொம்பினையுடைய எருமையின் இளநடையையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காட்சி மிகுதியால் யாவரும் காணத்தக்க நல்ல மனையின்கண்; கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை சிறு தாழ் செறித்த மெல்விரல் சேப்ப - வளைந்த குண்டலத்தைக் காதிலணிந்த செழுவிய செய்ய பேதைமையையுடைய காதலி சிறிய மோதிரஞ் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படியாக; வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண்டு அமர்த்த கண்ணள் - வாழையிலையைக் கொய்துவந்து அடிக்காம்பு பருத்திருத்தலின் அதனை வகிர்ந்து பரிகலமமைத்து அடிசிலாக்குதலாலே புகைபடிந்து அமர்த்த கண்களையுடையளாய்; தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் அம் துகில் தலையில் துடையினள் - அழகுபெறப் பிறை போன்ற நுதலினுண்டாகிய சிறிய நுணுகிய பலவாய வியர்வை நீரை அழகிய முன்றானையினுனியாலே துடைத்துக்கொண்டு; நம்புலந்து அட்டிலோள் - நம்மீது புலவி மிக்கு அடிசிற்சாலையிடத்திராநின்றாள்; விருந்து எமக்கு வருக - இப்பொழுது விருந்தினராய் வருபவர் எம்முடன் வருவாராக! அங்ஙனம் வரின்; அம்மா அரிவை சிவப்பாள் அன்று - இந்த அழகிய மாமைநிறத்தையுடைய அரிவை சினங்கொண்டு ஒருபொழுதும் கண் சிவப்பதில்லை, அன்றியும் குறுமுறுவல் கொண்ட முகத்தினளாய் இருப்பள்; சிறிய முள் எயிறு தோன்ற முறுவல் கொண்டமுகம் காண்கம் - ஆதலின் நமது முயக்கத்துக்கு இன்றியமையாத இவளது சிறிய முட்போன்ற எயிறு சிறிது தோன்றுமாறு நகை கொண்ட முகத்தையாம் காண்பேமாகி யிராநிற்போம்; எ - று.

    (வி - ம்.) செழுஞ்செய் பேழையென்னும் பாடத்துக்கு, குழைபெய்து போகட்ட செய்பேழையுடைய காண்டகு நல்லிலென மாறிக் கூட்டுக.

    தாழ் - மோதிரம். எமக்கு: உருபுமயக்கம். தில்: விழைவு. அரிவை அட்டிலோளென்றது புரையறந்தெளிதல். நப்புலந்து - நம்மைப் புலந்து: இரண்டன்றொகை: நம்புலந்தெனற்பாலது, 'அன்னபிறவும்' (தொல். எழுத்து. 157) என்றதனால் மெல்லெழுத்துப் பெறுதற்குரிய விரவுப் பெயர் வல்லொற்றுப் பெற்றுநின்றது.

    ஒப்புரவுக்கு ஒல்காளாதலின் விருந்து வருகவென்றான். முகந்திரிந்து நோக்காது இன்னகையொடு நோக்கல் விருந்தோம்பற்கு வாயிலாதலின் அஃது அவள் கண்ணதேயாம். அவ்வாயில்வழியே தானுமுய்தலின் முகங்காண்கமென்றான். மெய்ப்பாடு - உவகை. பயன் - வாயில் பெற்றுமகிழ்தல்.

     (பெரு - ரை.) இதனுள் ஊடற் குறிப்பினளாகிய தலைவி மனை வாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப்படர்தல் ஆயிற்று. 'வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ' என்றும், சிவப்பான்று என்றும் பாடவேற்றுமையுண்டு. இந்தப் பாடங்களே சிறப்புடையனவுமாகும். நப்புலந்தும் அட்டிலோளே எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள்விகாரத்தாற்றொக்கது. புலவி கூர்ந்தும் சிறுகாலை அட்டில்புக்குச் செம்மையுற அடிசிலாக்குதலும் அவள் மாண்பினை யுணர்த்துதல் உணர்க.

(120)
 (பாடம்) 1. 
பேழை.