(து - ம்.) என்பது, சிறைப்புறத்து வந்திருந்த தலைமகன் கேட்டு விரைய வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கித் தினைகொய்யலாயின; முல்லையரும்பின; நாடன் வருவானென்பது உண்டோ இல்லையோவென ஆராய்ந்து அன்னையும் அமரா முகத்தளாயினள்; ஆதலின் இனி நமது களவொழுக்கம் பொருந்தி நிகழுமோ வென்பதனை நீயே ஆராய்ந்தறிகவெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) ) இதனை,"களனும் பொழுதும் . . . . . அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத |
| கருங்காற் செந்தினை கடியும் உண்டன |
| கல்லக வரைப்பில் கான்கெழு சிறுகுடி |
| மல்லன் மருங்கின் மௌவலும் அரும்பின |
5 | நகையுரும் உரறும் நாம நள்ளிருள் |
| வரையக நாடன் வரூஉம் என்பது |
| உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்றென |
| நின்று மதிவல் உள்ளமொடு மறைந்தவை ஆடி |
| அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு |
10 | நீயே சூழ்தல் வேண்டும் |
| பூஏய் கண்ணியது பொருந்து மாறே. |
(சொ - ள்.) பூ ஏய் கண்ணி - நீலமலர் போலுங் கண்ணையுடையாய்! இருங் கல் அடுக்கத்து என்னையார் உழுத கருங் கால் செந்தினை கடியும் உண்டன - பெரிய மலையின் பக்கத்தில் என்னையன்மார் உழுது விதைத்த கரிய அடித் தண்டினையுடைய செவ்விய தினைக்கதிரெல்லாங் கொய்யப்பட்டன; கல் அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி மல்லல் மருங்கின் மௌவலும் அரும்பின - மலைசூழ்ந்த இடத்திலிருக்கின்ற கானகத்தே பொருந்திய சிறுகுடியின் வளப்பத்தையுடைய பக்கங்களிலுள்ள மல்லிகையும் அரும்புண்டாயின; நகை உரும் உரறும் நாம் நள் இருள் வரையக நாடன் வரூஉம் என்பது உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் என நின்று மதி வல் உள்ளமொடு - இன்னதொரு மின்னொளியுடன் கூடிய இடி முழங்குகின்ற அச்சத்தையுடைய இரவு நடு யாமத்து இருளில் மலைசூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது உண்மையோ ? இல்லையோ ? வேறுயாதோ ? என நின்று ஆராயவல்ல உள்ளத்துடனே; மறைந்து அவை ஆடி அன்னையும் அமரா முகத்தினள் - அயலார்க்குத் தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு அன்னையும் விரும்பாத கொடுமை தோன்றிய முகத்தினளா யிராநின்றாள்; அதுபொருந்தும் ஆறு நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும் - ஆதலால் அவனோடுண்டாகிய களவொழுக்கம் இனி நிகழுமா ? என்பதனை நின் உள்ளத்தாலே நீயே ஆராய்ந்தறியவேண்டுங்காண்!; எ - று.
(வி - ம்.) கடியுணல் கூறவே இனிப் பகற்குறி நிகழாதென்றதாம். மௌவ லரும்புதல் கார்காலத்தாதலின் அதுவுந் தினைகொய்தற்கு அடையாயிற்று. அஃது அரும்பியது கூறவே அரும்பு மலருங்காலம் வரைதற்குரியதென்று குறிப்பித்ததாம். உருமுரறு நள்ளிருளென்றது தலைவன் வருநெறியினேதத்துக்கஞ்சி இரவுக்குறியு மறுத்ததாம். அமரா முகத்த ளன்னை யென்றது, களவொழுக்கம் புலப்பட்டு அலரெழுந்தமையும் தலைவியை யில்வயிற் செறித்தமையுங் குறிப்பித்ததாம். இவ்வனைத்துங்கூறி இருவகைகுறியு மறுத்ததால் வரைவுடன்படுத்தியதாயிற்று. அமராமுகத்த ளென்றது, முட்டுவயிற்கழறல். உருமுரறு மென்றது, ஏதம் ஆய்தல். கடியுண்டன முதலியவை, அவன் புணர்வுமறுத்தல். ஏனை மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின என்றும் பாடம். இதற்கு மெல்லிய பள்ளங்களின் அயலிலே மல்லிகை அரும்பின என்க. மௌவல் - முல்லையுமாம். இனி நரையுரும் உரறும் என்றும் பாடம். நரை - பெருமை. "மரந்தின்னூஉ வரையுதிர்க்கும் நரையுருமின் ஏறனையை" என மதுரைக் காஞ்சியிலும் வருதலுணர்க; (மதுரைக்-63) மறந்தவை ஆடி என்புழி, ஆடி என்றது ஒற்றாடி; அஃதாவது ஒற்றியறிய முயன்று என்றபடியாம். நள் இருள் வரையக நாடன் வரூஉம் என்பது என்றது, அங்ஙனம் எழும் அலரும் உண்டென்று நுண்ணிதின் உணர்த்தியபடியாம். நீயே சூழ்தல் வேண்டும் எனவே என் சூழ்ச்சியின்கண் அது இனி நிகழவியலாதென்பது துணியப்பட்டது என்றவாறும் ஆயிற்று. அது என்றது களவொழுக்கத்தை.
(122)