(து - ம்.) என்பது, "ஒன்றாத் தமரினும்" என்ற
(தொல். பொரு. 41) சூத்திரத்துக் கூறப்பட்ட 'உடைமைய துயர்ச்சி' கருதிப் பொருள் சேர்த்தற்பொருட்டுப் பிரிய வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கி மற்றும் அதன்கண்ணே கூறப்பட்ட பொருள் செயல்வகைப் பாலவாகிய 'நாளதுசின்மையும், அன்பினதகலமும்' இன்பத்தின்பாலவாகிய 'இளமைய தருமையும் அகற்சிய தருமையும், பிறவுங்' கூறி வருந்திச் செலவழுங்கா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| பைங்காய் நல்லிடம் ஒரீஇய செங்காய்க் |
| கருங்களி ஈந்தின் வெண்புறக் களரி |
| இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல் |
| ஆட்பெறல் நசைஇ நாட்சுரம் விலங்கித் |
5 | துனைதரும் வம்பலர்க் காணாது அச்சினம் |
| பனைக்கான்று ஆறும் பாழ்நாட்டு அத்தம் |
| இறந்துசெய் பொருளும் இன்பந் தருமெனின் |
| இளமையின் சிறந்த வளமையும் இல்லை |
| இளமை கழிந்த பின்றை வளமை |
10 | காமந் தருதலும் இன்றே அதனால் |
| நில்லாப் பொருட்பிணிச் சேறி |
| வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே. |
(சொ - ள்.) நெஞ்சம் நல் இடம் பைங்காய் ஒரீஇய செங்காய்க் கருங்களி ஈந்தின் - நெஞ்சே! நல்ல மேலிடமெல்லாம் பசுங்காய் நிறமாறிச் செங்காயாகிப் பின்னர்க் கருங்களியாய் உதிர்கின்ற கனியையுடைய ஈத்த மரங்கள் மிக்க; வெண் புறக்களரி இடுநீறு ஆடிய கடு நடை ஒருத்தல் - வெளிய புறத்தினையுடைய களர்நிலத்திலே பட்ட புழுதிபடிந்த கடிய நடையையுடைய களிற்றியானை; ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி துனைதரும் வம்பலர்க் காணாது - நெறியிலே செல்லுபவரைக் கண்டு கொல்லுவதற்கு விரும்பி விடியற்காலத்தில் சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்று ஆங்கு விரைவில் வரும் அயலார் யாரையும் காணாது; அச் சினம் பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் - தான் கொண்டிருந்த அச் சினத்தைப் பனைமரத்தின் மோதி அப்பால் அடங்குகின்ற பாழ்த்த நாட்டினையுடைய பாலை நிலத்திலே; இறந்து செய்பொருளும் இன்பம் தரும் எனின் - சென்று ஈட்டப்படும் பொருளும் ஓரின்பத்தைத் தருமெனில், இளமையின் சிறந்த வளமையும் இல்லை - அதுதானும் இளமையில் நுகரும் காமவின்பத்தினுங்காட்டிற் சிறந்த இன்பமாமோ? இல்லையே! அங்ஙனமாக அத்தகைய வின்பத்தைத் தரும் வளமை சிறந்ததாகுமோ? இல்லையன்றோ! இளமை கழிந்தபின்றை வளமை காமந்தருதலும் இன்றே - அத்தகைய காமவின்பந்தான் இளமையிலேயே துய்க்கலாவதன்றி முதுமையின் கண்ணே துய்க்கப்படுவ தொன்றாகுமோ? இல்லையே! இளமைப் பருவத்தைப் பொருளீட்டுதலிலே கழித்துவிட்டாலோ அப் பொருள்வளம் முதுமையின்கண்ணே காமவின்பத்தைத் தருதற்கும் இயையுமோ? இல்லையே; அதனால் நில்லாப் பொருள் பிணிவல்லே சேறி நின் வினை வாய்க்க - ஆதலின் இவற்றை ஒருசேர ஆராய்ந்து நிலைநில்லாப் பொருளாசை நின்னைப் பிணித்தலாலே இக் காமவின்பத்தினைக் கைவிட்டு விரையச் செல்கின்றனை ஆயிற்சென்றுகாண்! நின் செயல் நினக்கு வாய்ப்புடைத்தாவதாக!; எ - று.
(வி - ம்.) களரி - உப்புப்பூத்த பாழ்நிலம். நீறு - புழுதி. வல்லே - விரைவாக.
ஈந்தின் பசுங்காய் பின்னர்ச் செங்காயாய்ப் பின்பு களியாயகனியாகுமென்றது, நமது யாக்கையின் இளமைபோய்ச் சிறிது முதிர்ந்து பின்பு தளர்ந்து திரையுமென்றதாம். யானை ஆட்பெறல் நசையாலே பனையை மோதுமென்றது, ஊழ்வினை உருத்துவந்து ஒருகால் நம்மையு மொறுக்குமென்றதாம். இவ்விறைச்சியால் 'நாளது சின்மை' கூறியதாயிற்று. போதரும்பொழுது வெளிப்படையாகக் கூறினாற் சொகினத்தின் மாறாமாதலால் இறைச்சியாலே பொருள் கொள்ளவைத்தனனாம். 'இளமையிற் சிறந்த வளமையு மில்லை' என்றது, இளமையதருமை கூறியதாயிற்று. "நில்லாப் பொருட்பிணிச் சேறி" என்றது, பொருள் நிலையற்றவாதலிற் செல்லாது ஈண்டே துய்த்தியென 'அன்பினதகலமும், அகற்சிய தருமையும்' கூறியதாயிற்று. ஏனையவும் உய்த்துணர்க. மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) எனவே, "இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ? ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு" என நெஞ்சிற்கறிவுறுத்தனாயிற்று. பொருளும் என்புழி உம்மை இழிவுசிறப்பு.
(126)