திணை : நெய்தல்.

     துறை : இது, மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன் வேறுபடாமையாற்றுவித்தாய் பெரியை காண் என்றாற்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் மணம்புரிந்து கொண்ட மறுநாள், அங்குச் சென்ற தோழியை அவன் 'இன்றளவும் தலைவி வருந்தி வேறுபடாமல் நன்றாகப் பாதுகாத்தனை, நீ பெரியையென்றலும், தோழி என்னைப் புகழ்வதினாலாய தொன்றுமில்லை; நீ மறவாதிருத்தற்பொருட்டு யாம் தொழிலும், பொழிலும், உயவுநெஞ்சமும், ஊடுதலுமுடையே மில்லை; ஆதலின் எங்களைக் கருதியிருந்த நீயே பெரியைகா'ணெனப் புகழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, 'பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த, தெறற்கரு மரபின் சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

    
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்  
    
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு  
    
ஊடலும் உடையமோ உயர்மணற் சேர்ப்ப  
    
திரைமுதிர் அரைய தடந்தாள் தாழைச்  
5
சுறவுமருப்பு அன்ன முள்தோடு ஒசிய  
    
இறவார் இனக்குருகு இறைகொள இருக்கும்  
    
நறவுமகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன்  
    
கள்கமழ் பொறையாறு அன்னவென்  
    
நற்றோள் நெகிழ மறத்தல் நுமக்கே.  

     (சொ - ள்.) உயர் மணல் சேர்ப்ப - உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரை முதிர் அரைய தடந் தாள் தாழை சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய - திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறவு ஆர் குருகு இனம் இறைகொள இருக்கும் - இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன் - கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள் கமழ் பொறையாறு அன்ன என் நல்தோள் - கள்ளின் மணங் கமழும் 'பொறையாறு' என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழ மறத்தல் நுமக்கு - நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ - வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர் மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ?; எ - று.

     (வி - ம்.) மறத்தல் நுமக்கு என்பதன் உருபுபிரித்து மாறிக் கூட்டுக. ஆதலின் என்பது முதற்குறிப்பெச்சம். ஏனைய இசையெச்சம். இசையெச்சமாவது இரண்டு முதலிய சொற்கள் எஞ்சி நிற்கப்பெறுவது.

     நும்மையின்றி விளையாட்டயர்தல் முதலாயின செய்திலேமெனவும், நும்மைக் கருதியிருந்த நெஞ்சினேமெனவும், ஊடலிலேமெனவுங் கூறியதனால் நும்மையே நினைந்திருந்தேமென்றும் அங்ஙனம் நீயிருங் கருதியிருந்ததனால், ஒருவரையொருவர் பிரிந்திலிரென்றுங் கூறி உள்ளுறையாலும் புலப்படுத்தி மகிழ்வித்தாள்.

     உள்ளுறை :- தாழையின் தோட்டின்மீது இறவு ஆர்ந்த குருகு இறைகொள இருக்குமென்றது, எம் தலைவி மனமகிழ்ந்து தழையும்படி அவளுள்ளத்தில் செல்வம் நிரம்பிய நீயிர் வீற்றிருக்கின்றீ ரென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

     (பெரு - ரை.) ஆடிய, அல்கிய என்பன செய்யிய என்னும் வாய்பாட்டெச்சங்கள். அவை உடையமோ என்னும் குறிப்பு வினை கொண்டன. குருகு இருக்கும் பொறையாறு, பெரியன் பொறையாறு எனத் தனித் தனி கூட்டுக. பொறையாறு தஞ்சை மாவட்டத்துக் கீழைக் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினம்.

(131)