(து - ம்.) என்பது, தலைமகன் மணம்புரியவேண்டிப் பொருளீட்டுதற்குப் பிரிந்து சென்று நீட்டித்தலும் அதனையாற்றாது தலைவி வருந்துவது கண்ட தோழி அவர் விரையவருவாராதலின் நீ வருந்தாதே யென்றாளை நோக்கி நீ கூறுகின்ற மொழியினால், என்னெஞ்சின் கணெழுந்த காமத்தீயானது சிறிது தணிவதுண்டுபோலுமென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.
| தோளே தொடிகொட்பு ஆனா கண்ணே |
| வாளீர் வடியின் வடிவிழந் தனவே |
| நுதலும் 1 பசலை பாயின்று திதலைச் |
| சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல் |
5 | மணியேர் ஐம்பால் மாயோட் கென்று |
| வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற |
| நாமுறு துயரஞ் செய்யலர் என்னும் |
| காமுறு தோழி காதலம் கிளவி |
| இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த |
10 | தோய்மடற் சின்னீர் போல |
| நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே. |
(சொ - ள்.) காமுறு தோழி திதலைச் சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் மணி ஏர் ஐம்பால் மாயோட்கு - என்பால் விருப்ப மிக்க தோழீ! தித்தியின் சிலவாய புள்ளிகளமைந்த பலவாய வடங்களையுடைய காஞ்சி யணிந்த அல்குலையும் நீலமணி போன்ற கூந்தலையும் உடைய இம் மாமை நிறம் உடையாட்கு; தோள் தொடி கொட்பு ஆனா கண் வாள் ஈர் வடியின் வடிவு இழந்தன நுதலும் பசலை பாயின்று என்று - தோள்கள் தாம் அணியப் பெற்ற வளை சுழன்று கழலுதலை நீங்கிற்றில, கண்களும் வாளாற் பிளந்த மாவடுப் போன்ற வடிவை இழந்தன நெற்றியும் பசலை பரவியது என்று; வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற - கொடிய வாயையுடைய ஏதிலாட்டியர் பழிச்சொல் எடுத்துத் தூற்றாநிற்கும்படி; நாம் உறு துயரம் செய்யலர் என்னும் காதல் அம் கிளவி - நங் காதலர் அச்சமிகுகின்ற துன்பத்தை நமக்குச் செய்குபவர் அல்லர் ஆதலால் அவர் விரைய வருகுவர் என்று நீ என்னைத் தேற்றிக் கூறுகின்ற என்பால் அன்பு மிக்க இச் சொல்லானது; இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த மடல் தோய் சில் நீர் போல - இரும்பு வேலை செய்கின்ற கொல்லன் தான் வெய்ய உலையிலே தெளித்த பனைமடலாலே தோய்த்தலையுடைய சிலவாய நீர் அவ்வுலை நெருப்பைச் சிறிது அவிக்குமாறு போல; நோய் மலி நெஞ்சிற்கு சிறிது ஏமம் ஆம் - காமநோய் மிக்க என் நெஞ்சில் அந் நோயைச் சிறிது தணித்து எனக்குப் பாதுகாவலராயிராநின்றது காண் ! எ - று.
(வி - ம்.) கொட்பு - சுழற்சி. வடி - மாவடுவுக்கொரு பெயர், காழ் - இரு நான்கு கொத்துக்கொண்ட காஞ்சியென்னும் அணியுமாம். நாம் - அச்சம். மடல் - பனைமட்டைக்காம்பு. ஏமம் - காவல். பசலை பாயின்று என்றது, பசலை பாய்தல். தோள் தொடி கொட்பானாவென்றது, உடம்பு நனிசுருங்கல்; மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) தோழீ! பெண்டிர் தூற்ற (நங்காதலர்) துயரம் செய்யலர் என்று கூறி நீ வற்புறுத்தும் கிளவி கொல்லன் உலையிற்றெளித்த நீர்போல (என்) நெஞ்சிற்குச் சிறிது ஏமம் ஆகும் என இயைத்துக் கொள்க.
(133)