(து - ம்,) என்பது, தலைவன் வரையாது நீட்டித்தலானே ஊரார் பழிதூற்றுவர் என்பதறிந்த தோழி சிறைப்புறத்தானாகிய அவன் கேட்டு வரையுமாற்றானே தலைவர் நம்மொடு நகைப்ப அவரது நகையை மெய்யெனக்கொண்டு கூடி இப்பொழுது அவர் அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது. அங்ஙனம் அவர் நகுவதன்முன் சீறூரினியதாயிருந்ததென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்' (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை |
| மாவரை புதைத்த மணன்மலி முன்றில் |
| வரையாத் தாரம் வருவிருந்து அயருந் |
| தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர் |
5 | இனிதுமன் றம்ம தானே பனிபடு |
| பல்சுரம் உழந்த நல்கூர் பரிய |
| முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும் |
| வாலுளைப் பொலிந்த புரவித் |
| தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. |
(சொ - ள்.) பனி படு பல் சுரம் உழந்த நல்கூர் பரிய முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும் - குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய நிலத்து வருந்தி வருதலாலுண்டாகிய குறைந்த செலவினையுடையவாய் ஒலிக்கின்ற அலைமோதிக் கொழிப்பக் கிடந்த புதிய மணலிலே தேருருள் அழுந்துதலானே செல்லமாட்டாது சுழலாநிற்கும்; வால் உளை பொலிந்த புரவித் தேரோர் நம்மொடு நகா ஊங்கு - வெளிய பிடரிமயிர் பொலிவு பெற்ற புரவிபூட்டிய தேரினையுடைய தலைவரொடு மகிழ்ந்து ஊடாடாத முன் உவ்விடத்தே; தூங்கல் ஓலை ஓங்கும் மடல் பெண்ணை மா அரை புதைத்த மணல்மலி முன்றில் - தொங்குகின்ற ஓலையையும் நீண்ட மடலையும் உடைய பனையினது கரிய அடி மரம் புதைபடுமாறு மூடப்பட்ட மணல் மிக்க முற்றத்தின்கணிருந்து; வரையா தாரம் வருவிருந்து அயரும் - அளவுபடாத உணவுப் பொருளை வருகின்ற விருந்தினர்க்குப் பகுத்துக்கொடா நிற்கும்; தண்குடி வாழ்நர் அம் குடி சீறூர் மன்ற இனிது அம்மதானே - மெல்லிய குடிவாழ்க்கை யுடையராயிராநின்ற அழகிய குடியிருப்பையுடைய சீறூர் மிக இனிமையாயிருந்தது; அவரொடு மகிழ்ந்து ஊடாடிய பின் அவர் நமது அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது; எ - று.
(வி - ம்.) தாரம்-உணவுப்பொருள். சுரம்-கடத்தற்கரிய நிலம். பரி-செலவு. கொட்குதல்-சுழலுதல். உளை-பிடரிமயிர். ஊங்கேயுள்ள சீறூரெனக் கூட்டுக. நகை-மகிழ்ந்து உடன்படுதல். முன்றில்-முற்றம்.
ஊரார் அலரெடுத்தலால் இனிமை கழிந்ததென்றாள். தன்னூராரைப் போல நீயிரும் மணஞ்செய்துகொண்டு இல்லற நிகழ்த்தற்பாலிரென்னுங் குறிப்பால் தன்னூர் வருவிருந்தயருங் குடியென்றாள்.
மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) நகாஅ ஊங்கு என்பதற்கு, நகாமுன்பெல்லாம் எனினுமாம்; உவ்விடத்தே எனல் வேண்டாவாம். தண்குடி - தன்கண் வாழ்வார்க்கு உடலும் உளமும் குளிருஞ் சிறப்புடைய குடி என்க. மன்ற: தேற்றப் பொருட்டு. அம்ம: கேட்பித்தற்கண் வந்தது. ஊடாடல்-அளவளாவல்.
(135)