(து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே தோழிபால் தன்குறை கூறலும், அவள் மறுத்தனளாக, அதுபொறாத தலைமகன் மீண்டும் அவள் கேட்டுத் தன் குறைமுடிக்கு மாற்றானே தன் நெஞ்சை நோக்கி 'நெஞ்சமே பந்துவிளையாடி யேகுமவள் நமக்கு அருள் செய்யினும் அருளாது விடினும் நீ முனியாதே கொள; யானுற்ற நோய்க்கு அவளன்றிப் பிறிதொரு மருந்து இல்லை'யென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தண்டாது இரப்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.
| கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த |
| சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் |
| வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் |
| புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் |
5 | பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை |
| நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் |
| பந்தொடு பெயரும் பரிவி லாட்டி |
| அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து |
| 1பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம் |
10 | அருந்துயர் அவலந் தீர்க்கும் |
| மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே. |
(சொ - ள்.) மா நெஞ்சே கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த - எனது பெருமையுற்ற நெஞ்சமே! நீரை முகந்து கொள்ளுதலையுடைய கரிய மேகம் மேல்பாலுள்ள மலையிலே எழுந்து மழை பெய்து தழையச் செய்த; சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் - சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் குறையோடு; வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி - பலவாய பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகு பெற வாரி; புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் பெருங் கண் ஆயம் உவப்ப - அச்சாந்தம் காய்ந்தவழி உதிர்க்கப்பட்ட துகள் பொருந்திய ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும பெரிய கண்ணையுமுடைய தோழியர் மகிழுமாறு; தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து - தன் தந்தையின் நெடிய தேர் இயங்குகின்ற நிலவு போன்ற வெளிய மணல் பரவிய முன்றிலின்கண்; பந்தொடு பெயரும் பரிவு இல்லாட்டி - விளையாடும் வண்ணம் பந்தோடு செல்லுகின்ற நம்பால் அன்பில்லாத இளமகள்; அருளினும் அருளாள் ஆயினும் - நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும்; பெரிது அழிந்து பின்னிலை முனியல் - நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் உற்ற நோய்க்கு அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து பிறிது என்னதூஉம் இல்லை - யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்! எ - று.
(வி - ம்.) கொண்டல் - கொள்ளுதல் என்னும் பொருளது. ஏர்பு - எழுச்சி. குழைத்தல் - தழையச்செய்தல். ஐம்பால் - கூந்தல். என்னதூஉம் - எவ்வளவும். பின்னிலை - வழிபாட்டு நிலை.
பலபடியாகவும் தான் தோழியை இரந்து குறைகூறுவதை அறிந்திருந்தும் அறியாள்போன்று பந்தொடுசெல்லுதலானே பரிவிலாட்டி என்றான்.தோழிமார் மகிழ இடையே செல்லுதலாலே பரிவிலள்போல் ஆயினாளன்றி வேறில்லையாதலின் இனி அருளுதலையுஞ் செய்யுமென்பது கொண்டு பின்னிலை முனியாதே என்றான். அவளால் வந்த நோயாதலின் அந்த நோயின்மருந்து அவளே என்றான். "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து" (குறள் - 1102) என்றதனானும் அறிக. மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - தானே புலம்பி ஆறுதல்.
(பெரு - ரை.) கொண்டல் - கீழ்காற்று. கீழ்காற்றாற் கொண்டு வரப்படும் பெரிய மழை எனப் பொருள் கோடல் சிறப்பு. குடக்கு ஏர்பு என்பதற்கு மேற்றிசையிலே எழுச்சியுற்று எனல் அமையும். மேம்பாலுள்ள மலையிலே எழுந்து எனல் வேண்டாவாம். "கொண்டன் மாமழை" (34) எனப் புறத்தினும் வருதல் காண்க. கூதிர்ப்பருவமாகலின் கொண்டல் மாமழை கூறப்பட்டது.
(140)
(பாடம்) 1. | முன்னிலை முனியல். |