திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, ஆற்றது ஏதத்திற்குக் கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.

     (து - ம்,) என்பது, இரவுக்குறி வாராநின்ற தலைமகன் சிறைப்புறத்தானாக அவன்கேட்டு வரையுமாற்றானே தலைவி தோழியை நோக்கி "நம் காதலர் கான்யாற்றின்கண்ணே தமியராய் நீந்திவருவதுகருதி அறியாமையேனுடைய கண்கள் கலுழவும் நெஞ்சம் கவலையால் வருந்தவும் என்நிலைமை இவ்வாறாகிய கா"ணென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
பெருங்களிறு உழுவை தாக்கலின் இரும்பிடிக் 
    
கருவிமா மழையின் அரவம் அஞ்சுபு 
    
போதேர் உண்கண் கலுழவும் ஏதில் 
    
பேதை நெஞ்சம் கவலை கவற்ற 
5
ஈங்கா கின்றால் தோழி பகுவாய்ப் 
    
பிணவுப்புலி வழங்கும் அணங்கருங் கவலை 
    
அவிரறல் ஒழுகும் விரைசெலற் கான்யாற்றுக் 
    
கரையருங் குட்டந் தமியர் நீந்தி 
    
விரவுமலர் பொறித்த தோளர் 
10
இரவி்ல் வருதல் அறியா தேற்கே. 

     (சொ - ள்.) தோழி பகுவாய்ப் பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை - தோழீ! பிளந்த வாயையுடைய பெண் புலி இரைதேடி இயங்குகின்ற துன்பம் நீங்குதற்கரிய கவர்த்த வழியில்; அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் கரை அருங் குட்டம் - விளங்கிய விரைந்த செலவையுடைய நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய கான்யாற்றில் ஆழமுடைய புனலின்கண்ணே; தமியர் நீந்தி விரவு மலர் பொறித்த தோளர் - தமியராய் நீந்தி அந் நீரிலே கலந்த மலர்கள் பொருந்திய தோளோடு; இரவில் வருதல் அறியாதேற்கு - நங்காதலர் இரவில் வருதலை எண்ணி அறியாமையுடையேனாகிய எனக்கு; உழுவை பெருங்களிறு தாக்கலின் இரும்பிடி கருவி மாமழையின் அரவம் அஞ்சுபு - அந் நெறியின்கண்ணே புலி பெரிய களிற்றியானையை மோதிக் கொல்லுதலால் அதனை அறிந்த கரிய பிடியானை மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையைக் கேட்டு நடுங்கி; போது ஏர் உண்கண் கலுழவும் ஏதில் பேதை நெஞ்சம் கவலை கவற்ற - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நீரை வடியவிடவும் யாதுமில்லாத பேதைமையுடைய என்னெஞ்சம் கவலையால் வருந்தவும்; ஈங்கு ஆகின்று - என்னிலைமை இவ்வண்ணமா யிராநின்றது காண்! எ - று.

     (வி - ம்.) ஈங்கு - இவ்வண்ணம். அறல் - நீர். குட்டம் - ஆழம். கவற்றவும் என்பதன் உம்மை தொக்கது.

     தோளின் கண்ணே தங்கிய மலரொடு வரக்கண்டமையால் யாற்றிடை நீந்திவந்தமை யறிந்து வருந்தினாள். குறிஞ்சியாதலின் பிடிமுழக்கம் அருகில் முழங்கியது அறிந்தாளாயிற்று. கவலை - ஆற்றது ஏதமஞ்சிய கவலை. இஃது அழிவில் கூட்டத் தவன்புணர்வு மறுத்தல்.

     உள்ளுறை :- உழுவையாலே களிறுதாக்கப்படப் பிடி புலம்புமென்றது, ஆற்றது ஏதத்தாலே தலைவன் தாக்கப்படுவனோவெனயான் புலம்பாநின்றே னென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - வரைவுடன்படுத்தல்; அயாவுயிர்த்தலுமாம்.

     (பெரு - ரை.) இனி புலி வழங்கும் கவர்ந்த வழியில் கான்யாற்றுக்குட்டம் தமியர் நீந்தி இரவில் வருதல் இதுகாறும் அறியாமல் என் பேதை நெஞ்சம் இரும்பிடி அரவம் கேட்டு அஞ்சிக் கவற்றுதலால் என்னிலை இவ்வண்ணம் ஆயிற்று என்றாள் என்பதே நேரிய உரையாகும். இவர் இவ்வாறு வருகின்றார் என்பதனை அவர்தோளில் ஒட்டியிருந்த விரவு மலரால் யான் இப்பொழுது கண்டுகொண்டேன் என்பாள் குட்டந்தமியர் நீந்தி விரவுமலர் பொறித்த தோளர் வருதல் என்றாள். இதனை முன்னரே அறிந்திருப்பின் யான் இரவுக்குறிக்கு இயையேன் என்பது கருத்து. அவன் இங்ஙனம் வருதலை அறியாமையான் இதற்கு வருந்தாது பிடியின் பிளிறு கேட்டு அதற்கே கவலும் என்பாள் பேதை நெஞ்சம் என்றாள். கண்தாமே அவரைக் கண்டு தாமே கலுழ்ப ஆகலின் அவை கலுழ்தல் தகும்; யாதொன்றும் செய்யாத நெஞ்சமும் கவல்கின்றது என்பாள் ஏதில் நெஞ்சம் என்றாள்.

(144)