(து - ம்,) என்பது, பின்னர் இளவேனிற்பருவத்து வருவேனென்று கூறிப் பொருள்வயிற்பிரிந்துபோன தலைமகன் சென்ற வினை முடிக்கு முன்னம், கூறிய பருவம் வருதலும் அதனையறிந்து தன்னெஞ்சினை 'நெஞ்சமே, இளவேனில் நாளிலே குயில் கூவும் பொழுதெல்லாம் அவ்வோசையை நம் காதலி கேட்டுக்கேட்டு மாறாது கலுழாநிற்குமே' யென் றழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப் |
| பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப் |
| பல்பொறி அரவின் செல்புறங் கடுப்ப |
| யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில் |
5 | இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் |
| நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக் |
| கேட்டொறுங் கலுழுமால் பெரிதே காட்ட |
| குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கை |
| அம்பூந் தாதுக்கு அன்ன |
10 | நுண்பல் தித்தி மாஅ யோளே. |
(சொ - ள்.) இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் பெரும் பெயல் பொழிந்த வழிநாள் அமையத்து - பெரிய இடமகன்ற இவ்வுலகின்கண் உயிர்களுக்குரிய நெருங்கிய தொழிலைக் கொடுத்துப் பெருமழை பெய்துவிட்ட பிற்றைநாட் காலையிலே; பல்பொறி அரவின் செல்புறம் கடுப்ப யாற்று அறல் நுணங்கிய நாள் பதம் வேனில் - பல புள்ளிகளமைந்த பாம்பு ஓடும்போது அதன் முதுகு நெளியுமாறு போல யாற்றுநீர் நுணுகியோடா நின்ற செவ்வி அமைந்த இளவேனிற் பருவத்திலே; இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும் - பூங்கொத்துக்கள் நிரம்பிய மாமரத்தின்கண்ணவாகிய பெடையொடு புணர்கின்ற குயில் கூவும்பொழுதெல்லாம்; காட்ட குறும் பொறை அயலநெடு தாள் வேக அம் பூந்தாது உக்கு அன்ன - காட்டின் கணுள்ள சிறிய மலையின்பக்கத்தவாகிய நீண்ட அடியையுடைய வேங்கை மரத்தின் அழகிய பூந்தாது உதிர்ந்தாற்போன்ற; நுண்பல் தித்தி மாயோள் - நுண்ணிய பலவாய சுணங்கு பரந்த மாமைநிறத்தையுடையாள்; நம்வயின் நினையும் நெஞ்சமொடு கேள்தொறும் கைம்மிக பெரிது கலுழும் - நம்பால் நினைந்து விடுத்த நெஞ்சுடனே அக்குயில் ஒன்றனையொன்று அழைக்கின்ற ஓசையைக் கேட்டுகுந்தோறும் காமமானது தன்வரம்பு கடந்து மிக அதனாலே பெரிதும் அழுது துன்பமுழவாநிற்குமே! எ - று.
(வி - ம்.) மழையில்லாவிடில் தொழில் யாதும் நிகழாதாதலால் தொழிலுதவிப் பெயல்பொழிந்தவென்றார். "ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால், (குறள் - 14) என்றதனாலும் மழையில்லையேல் தொழிலின்மை தெளிக. உண்டேல் தொழிலுண்மையுமாம். குயிலோசையாலே செவிப்புலன் இன்பமெய்துதல்போல ஏனைப்புலன்களும் ஒரே பொழுதகத்து இன்பமெய்துதல் முயங்கிக் கிடந்தாலன்றி யின்மையின் அதுகருதிக் கேட்டொறுங் கலுழுமேயென்றிரங்கினான். கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) "தொழில் உதவிப் பெரும் பெயல் பொழிந்த வழிநாள்" என்பதனோடு "மழை தொழில் உதவ" எனவரும் மதுரைக் காஞ்சியினையும் (10) நினைக. "மழைப்பருவந் தொடங்குமுன் வருகுவல் வருந்தாதேகொள்" என்று தேற்றி வந்தனன் ஆகலின் அப்பருவம் வந்துவிட்டதே என்றிரங்குவான் 'பெரும் பெயல் பொழிந்த வழிநாள் அமையம்' என்றான். அறல் கருமணலின் அறல் எனினுமாம்.
(157)