(து - ம்.) என்பது, தலைமகன் வரைந்துகொள்ளும் வண்ணம் வருகின்றதனை யறிந்த தோழி, கழிபேருவகையளாய்த் தலைவியை நெருங்கி 'நம் துறைவனுடைய குதிரைகள் நாள்தோறும் வந்துவந்தலைதலால் அவற்றை நோக்கி என்னெஞ்சம் வருந்தாநிற்கும்: அது கழிந்தது; இனி மணம்புரிதல் காரணமாக அவற்றுக்குத் துன்பமின்மையால் அவை இளைப்பொழிவனவாக'வென்று மாவின் மேல்வைத்து மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப்பட" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| உயிர்த்தன வாகுக அளிய நாளும் |
| அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு |
| எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் |
| கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப |
5 | நிலவுத்தவழ் மணற்கோடு ஏறி்ச்செல்வர |
| இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி |
| வருந்துமன் அளிய தாமே பெருங்கடல் |
| நீல்நிறப் புன்னைத் தமியொள் கைதை |
| வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க் |
10 | கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிற்று |
| வைகுறு வனப்பில் தோன்றும் |
| கைதையங் கானல் துறைவன் மாவே. |
(சொ - ள்.) பெருங்கடல் நீல் நிறப்புன்னைத் தமி ஒள்கைதை - பெரிய கடலருகிலுள்ள கரிய நிறத்தையுடைய புன்னையின் பக்கத்தவாகிய தனிமையினிருக்கின்ற தாழையின் ஒள்ளிய மடல்; நெடுஞ் சுடர்க் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி வானம் மூழ்கிய வயங்கு ஒளி ஞாயிற்று வைகுறு வனப்பின் தோன்றும் - நெடிய சுடரையுடைய கதிரினாலே இருளைப்போக்கி யெழுந்து உள்ளே கொதித்து ஆகாயத்திலே சென்று விளங்கிய ஒளியையுடைய ஆதித்தனது பாடுசாய்கின்ற அலகுபோலத் தோன்றா நிற்கும்; கைதை அம்கானல் துறைவன் மா -அத்தகைய தாழஞ்சோலை சூழ்ந்த துறைவனுடைய குதிரைகள்; நாளும் அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு - நாள்தோறும் நுண்மணலாகிய துகளை முகந்தெழுந்த அமையாது வீசும் ஊதைக்காற்றின் கண்ணே; எல்லியும் இரவும் என்னாது கல்எனக் கறங்கு இசை இன மணி - இது பகலென்றும் இஃது இரவென்றும் கருதாமல் ஒலிக்கின்ற இனிய ஒலியையுடைய ஒரு நிகரவாகிய மணிகள்; கைபுணர்ந்து ஒலிப்ப நிலவுத்தவழ் மணல் கோடு ஏறிச் செல்வர - ஒருசேரக் கோத்துக் கழுத்திலே பூட்டப்பட்டுக் கல்லென வொலிக்கும்படியாகத் தன் வெண்மை நிறத்தினால் நிலவு பரந்தாற்போன்ற மணற் குன்றுகளிலே ஏறிச் செல்லுதலானே; என் நெஞ்சம் இன்றுபோலத் தொன்று நனி வருந்தும் மன் - என்னெஞ்சம் இப்பொழுதுபோல முன்பே மிகவும் வருந்தியதாயிருந்தது; அளியது ஆம் - அந் நெஞ்சின் தன்மையைக் காணின் மிக இரங்கத் தக்கதாகும்; அளிய உயிர்த்தன ஆகுக - இன்று துறைவன் வரைவொடு புகுந்ததன் காரணமாக அவனுடைய குதிரைகள் தாம் இனி நாள்தோறும் வருந்துவனவல்ல; ஆதலின் இரங்கத் தக்கனவாகிய அவைகள் இப்பொழுது களைப்பாறுவனவாக ! எ - று.
(வி - ம்.) துறைவன்மா, என்னாது ஒலிப்பச் செல்வர என்னெஞ்சம் வருந்துமன்; அவைதாம் அளிய உயிர்த்தனவாகுக வெனக் கூட்டுக. கனலியென்னும் செய்தெனெச்சம் மூழ்கிய என்னும் பெயரெச்சத்தைக் கொண்டது. மூழ்கிய ஞாயிறென்க. புன்னை அத்தமனக் குன்றம்போலவும் தாழைமடல் கதிர்மழுங்கிய ஆதித்தன் போலவு மெனக்கொள்க. மன் - கழிவின் கண்ணது.
இறைச்சி :- புன்னையுந் தாழையும் ஒருசேரவிருக்குந் துறைவனென்றது, அவ்விரண்டன் மணமும் ஒருசேரக் கமழ்ந்து விளங்குதல்போலத் தலைவனுந் தலைவியுமாகிய நீங்களிருவீரும் வதுவையயர்ந்தில்லற நிகழ்த்திப் புதல்வரையீன்று விளங்குவீரென்றதாம். ஏனையுவமம் ஆயினும் ஞாயிற்றுப்புத்தேளை உவமித்தலினிஃ துள்ளுறையன்மை யுணர்க. மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியை ஆற்றியுவப்பித்தல்.
(பெரு - ரை.) உன்னுடைய துன்பங்களும் ஒழிய இனி நீயும் ஆற்றியிருப்பாயாக! என்பது குறிப்பெச்சம் என்க.
(163)