173. . . . . . . . . . . . . . .
திணை : குறிஞ்சி.

துறை : (1) இது, தோழி தலைவிக்குரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, அன்னை வெறியெடுக்கின்றாளென்று தலைமகனுக்கு அறிவுறுத்தி அவனை வரைந்தெய்துமாறு உடன்படுத்த வேண்டிச் சிறைப்புறமாக வந்த அவன் கேட்குமாற்றானே தோழி தலைவியை நோக்கி "வெறி அயருங்களத்து வருகின்ற முருகவேள் "என்னாலெய்தியதன்று, ஒரு தோன்றலாலெய்தியது இந்நோய்' என்று அன்னைபால் முன்னிலையானுங் கனவானும் அறிவுறுத்தின் அதனால் அவள் ஏதேனும் ஏதமெய்துமோ வென" நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு முற்செய்யுட்குக் கூறிய விதியே கொள்க.

துறை : (2) வெறியச்சுறீஇத் தோழி அறத்தொடுநிலை பயப்பித்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, அன்னை வெறியெடுக்கின்றாளெனத் தோழி தலைவியை அஞ்சுவித்து வெறியயருங்களத்தின்கண் அறத்தொடு நிற்குமாறு கூறியதுவும் ஆகும். (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதனை, "நாற்றமும்" என்னும் நூற்பாவின்கண் 'களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் . . . . .பிறவும் (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
சுனைப்பூக் குற்றும் தொடலை தைஇயும் 
    
மலைச்செங் காந்தள் கண்ணி தந்தும் 
    
தன்வழிப் படூஉம் நம்நயந்து அருளி 
    
வெறியென உணர்ந்த அரிய அன்னையைக் 
5
கண்ணினுங் கனவினுங் காட்டி இந்நோய் 
    
என்னினும் வாராது மணியின் தோன்றும் 
    
அம்மலை கிழவோன் செய்தனன் இதுவெனின்  
    
படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின் 
    
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ 
10
தொடியோய் கூறுமதி வினவுவல் யானே. 

     (சொ - ள்.) தொடியோய் யான் வினவுவல் - தொடியினையுடையாய் யான் நின்னையொரு செயலை வினவுகின்றேன்; சுனைப்பூ குற்றும் தொடலை தைஇயும் மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும் - அதுதான் யாதெனிலோ?; கேள்! சுனையின்கணுள்ள மலர் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலுள்ள செங்காந்தள் மலர்கொய்து அம்முருகவேள் போர்க்குச் சூடும் கண்ணியாக அமைத்தும் சார்த்தி; தன் வழிபடூஉம் நம் நயந்து அருளி - அவனை வழிபாடுசெய்கின்ற நம்மை ஆதரஞ் செய்யுமாறு விரும்பியருளி்; வெறி என உணர்ந்த அரிய அன்னையை - நாம் இப்பொழுது கொண்டிருக்கிற காமநோய் 'முருகு அணங்கியது காரணமாக வந்த இவள் மேனியின் வேறுபாடுதான் வெறியயர்ந்தால் நீங்கும்' என மாறாக நினைந்துடைய அம் மாறுபாடு எவ்வழியினாலும் நீங்கரிய நம் அன்னைக்கு; கண்ணினுங் கனவினும் காட்டி -கண்ணாலே குறிப்பாகக் காட்டுவதனோடு உறங்கும்பொழுது அவளது கனவின்கண்ணும் வந்து தோன்றித் தன்வடிவு புலப்படக்காட்டி; இந் நோய் என்னினும் வாராது - இக் காமநோய் என்னாலும் வேறுபிற அணங்குகளாலும் எய்தியதொன்றன்றுகண்டாய்; மணியின் தோன்றும் அம் மலை கிழவோன் இது செய்தனன் எனின் - வேறு யாவன் இதனைத் தோற்றுவித்தனன்கொல் என வினவின் 'நோக்குவோர்க்கு நீலமணி போலத் தோன்றாநிற்கும் அழகிய மலையையுடைய ஒருதோன்றலே இதனைச் செய்தனன்' என்று கூறுவானெனின்; படுவண்டு ஆர்க்கும் பைந்தர் மார்பின் நெடுவேட்கு ஏதம் உடைத்தோ - அதனாலே பொருந்திய வண்டுக ளாரவாரிக்கும் பசிய மாலையையணிந்த மார்பையுடைய அந் நெடிய முருகவேளுக்கு ஒரு குற்றமுமுண்டாகுமோ?; கூறுமதி - அதனை ஆராய்ந்து கூறிக்காண்; எ - று.

     (வி - ம்.) அன்னையை: உருபுமயக்கம். கண்ணி - போர்க்குச் சூடும் பூ. தெய்வமாதலின் கனவினுங்காட்ட அமையும். ஞாயிற்றின் வெம்மையாலே வறளாது மழைபெய்து நிறம்பெறுதலின் மணிபோலத் தோன்றும் என்றதாம்.

    இறைச்சி :- ஒன்றினேம் யாமென்று புகல்புக்க எம்மைக் கைவிட்ட அன்னோன் மலையாயிருந்தும், நீலமணிபோலத் தோன்றி விளங்காநிற்கும். இஃதென்ன வியப்போவெனப் பொருளின்புறத்தே தோன்றியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) இதன்கண் முதல் துறைக்கு அன்னை களவொழுக்கத்தை அறியாதவளாய் வெறியாடமுயல்கின்றாள் அதனால் தலைவிக்கு வரும் ஏதம் பலவாம் ஆதலின் விரைந்து வரைந்து கொள்வாயாக என்பது குறிப்பெச்சமாகவும்,

    இரண்டாவது துறைக்குத் தோழி தலைவியை நோக்கி அன்னை வெறியெடுக்க முயல்கின்றாள்; நீ தானும் மறைபுலப்படுத்தும் கருத்துடையையல்லை; இனி யாம் வாளாவிருத்தல் கூடாது; மறைபுலப்படுத்தல் வேண்டும். நின் கருத்தியாது என்று வினவுதல் குறிப்பெச்சமாகக் கோடல் வேண்டும்.

(173)