174. . . . . . . . . . . . .
    திணை : பாலை.

    துறை : இது, வினைமுற்றி வந்தெய்திய காலத்து ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்துவந்த தலைமகன் பரத்தையொடு முயங்கியதறிந்து நொந்துபுலந்த தலைவியைத் தோழி நெருங்கி 'நீ தலைவனோடிருந்தும் வருந்துவதென்னென்றாட்கு அவள் அறியாதார்க்கு அங்ஙனமே தோன்றுமாயினும் அவன் பரத்தைமார்பின்கண்ணே தன்னை மடுப்பானாயினான்; என்னை அன்பின்றி முயங்குவானாதலின், அவன் முயக்கந்தான் யாது பயனுடையதாகு'மென்று வருந்திக்கூறாநிற்பது.

     (சொ - ள்) இதற்கு,

  
"கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை, 
  
வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், 
  
காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும், 
  
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்"     (தொல். கற். 6)  

என்னும் விதிகொள்க. இதன்கண் காய்தலின் பாற்படுமென்க.

    
கற்றை ஈந்தின் முற்றுக்குலை யன்ன 
    
ஆளில் அத்தத் தாளம் போந்தைக் 
    
கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பிற் 
    
புலியெதிர் வழங்கும் வளிவழங்கு ஆரிடைச் 
5
சென்ற காதலர் வந்தினிது முயங்கிப் 
    
பிரியாது ஒருவழி உறையினும் பெரிதழிந்து 
    
உயங்கினை மடந்தை என்றி தோழி 
    
அற்றும் ஆகுமஃது அறியா தோர்க்கே 
    
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி 
10
மல்லல் மார்பு மடுத்தனன் 
    
புல்லுமற் றெவனோ அன்பிலங் கடையே. 

     (சொ - ள்.) தோழி ஈந்தின் கற்றை முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாளம் போந்தை - தோழீ! ஈந்தினது திரட்சியையுடைய முற்றிய குலைபோன்ற மக்களியங்காத நெறியின்கண்ணமைந்த தாளிப்பனையினது; கோள்உடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிம்பின் - குலைகளையுடைய நெடிய மடலிலிருந்து ஆண்பறவை தன் பெண்பறவையைக் கூவின்; புலி எதிர் வழங்கும் - அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழங்காநிற்கும்; வளி வழங்கும் ஆர் இடைச் சென்ற காதலர் - கோடைக்காற்று வீசுகின்ற அரிய நெறியிலே சென்ற காதலர்; வந்து இனிது முயங்கிப் பிரியாது ஒருவழி உறையினும் - மீண்டு வந்து இனிதாக நின்னை முயங்கி நீங்காது நீங்களிருவரும் ஓரிடத்தே உறையுங்காலையும்; பெரிது அழிந்து மடந்தை ! உயங்கினை என்றி - நீ பெரிதும் நெஞ்சழிந்து மடந்தையே ஏன் வருந்துகின்றனை? என்று கூறாநின்றனை; அஃது அறியாதோர்க்கு அற்றும் ஆகும் - அவ்வுண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டிமல்லல் மார்பு மடுத்தனன் - நம் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டையுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை மடுப்பானாயினான், இங்ஙனம் பிறள் ஒருத்திபால் அன்பு வைத்தால் என்மாட்டு அவனுக்கு எவ்வண்ணம் அன்பு தோன்றும்?; அன்பு இலங்கடை புல்லு எவன்? - அன்பென்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் யான் அவனைத் தழுவிக் கொள்வதனாலும் யாது பயன்படும்?; எ - று.

     (வி - ம்.) கோள் - காய். கொண்டி - கொள்ளைகொள்ளும் பரத்தை.

    இறைச்சி :- (1) ஈந்தின் முற்றுக்குலைபோன்றது தாளிப்பனங்குலையென்றது பரத்தையும் என்போலத் தலைமகனுக் குரியளாயினாளென்றதாம்.

    இறைச்சி :- (2) தாளிப்பனைமடலி லிருந்து ஆண்பறவை பெண்பறவையை விளித்தால் புலி எதிரொலியெடுப்ப முழங்காநிற்குமென்றது - இல்லகத்திருக்கும் யான் கணவனை விரும்பி ஏற்பின் அயலே பரத்தை முழக்கத்தோடு தலைவனை அழையாநிற்கு மென்றதாம்.

     மெய்ப்பாடு - அழுகை. பயன் - தலைவி புலவிகூர்தல்.

     (பெரு - ரை.) கற்றை ஈந்தின் என்பது தொடங்கி . . . . .. உயங்கினை என்னுந் துணையும் தோழி கூற்றைத் தலைவிகொண்டு கூறினபடியாம். அவனுடைய வீழாக்கொள்கைகள் அணைத்து வீழ்ந்தன; இப்பொழுது அவன் மல்லல் மார்பு கொண்டு மடுத்தனன் எனப் பொருள் கோடலுமாம்.

(174)