176. ....................
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது உணர்த்தவுணரும் ஊடற்பகுதிக்கண்ணதாகிய தலைவி தான் பூப்பு நீராடிய துணர்த்தவேண்டித் தன் தோழியைச் செங்கோலஞ்செய்துவிடுப்ப அதுகண்டு உலகியல் நோக்கித் தலைவனை விடுத்த பரத்தை யாம் தலைவியை அஞ்சி விடுத்தே மென்று ஊரார் கூறுவர் போலுமென்று உட்கொண்டு எதிர்வந்து உரையாடுதலை யஞ்சித் தான் கூறுவதனைத் தலைவியும் பாங்கியும் அறிந்துகோடற் பொருட்டு, அப் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியாகிய விறலியை நோக்கி, "அவள் நம்மை நயந்து கொண்டிருக்கையில் நாம் அவளை நயந்துகொள்ள வேண்டி அவனை விடுத்தோம் என ஊரார் புகலுவர்கொல்"லெனக் கூறுவதுடன் உள்ளுறையால் "யாம் அவனை மீட்டுக் கைக்கொள்வா"மெனவும் வெகுண்டு கூறாநிற்பது.

     (,இ - ம்) இதற்கு, “புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்” (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.

    
எம்நயந்து உறைவி ஆயின் யாம்நயந்து 
    
நல்கினம் விட்டதென் நலத்தோன் அவ்வயின் 
    
சால்பின் அளித்தல் அறியாது அவட்கவள் 
    
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி 
5
நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப் 
    
போதுபொதி உடைந்த ஒண்செங் காந்தள் 
    
வாழையஞ் சிலம்பின் வம்புபடக் குவைஇ 
    
யாழோர்த் தன்ன இன்குரல் இனவண்டு 
    
அருவி முழவின் பாடொடு ஒராங்கு 
10
மெல்மெல இசைக்கும் சாரல் 
    
குன்ற வேலித்தம் உறைவின் ஊரே. 

    (சொ - ள்) தோழி! எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து நல்கினம் விட்டது என் - விறலீ! தலைமகளானவள் எம்மை விரும்பி உறைபவளாயிருக்கையில் யாமாக அவளை விரும்பி அவள் விரும்பியவாறு நல்கிவிட்டதுதான் என்னவிருக்கின்றது?; நலத்தோன் அவ்வயின் சால்பின் அளித்தல் அறியாது - நம் நலத்திற்குக் காரணமாயிருக்கும் தலைமகனை அத் தலைவி பால் யாம் சால்பினாலே கொடுத்தது அறியாது; நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் போது பொதி உடைந்த ஒள் செங்காந்தள் - நிரைத்திருக்கின்ற யானையின் முகத்திலுள்ள கோடு போல அரும்புகள் பொதிந்தனவெல்லாம் மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள்; வாழை சிலம்பின் வம்பு பட - வாழையையுடைய சிலம்பின்கண் மணங்கமழாநிற்ப; யாழ் ஓரத்து அன்ன இன்குரல் இன வண்டு - யாழோசையைக் கேட்டாலொத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள்; குவைஇ அருவி முழவின் பாடொடு ஒராங்கு மெல்மெல இசைக்குஞ் சாரல் - திரண்டு புகுந்து அருவியாகிய முழவொலியோடு ஒருதன்மைப்பட மெல்ல மெல்ல ஒலியாநிற்கும் சாரலிலே; குன்ற வேலித் தம் உறைவின் ஊர் - குன்று சூழ்ந்து வேலியாகயுடைய அவர்கள் இருக்கின்ற ஊரிலுள்ளார்; அவட்கு அவள் காதலள் என்னுமோ உரைத்தி சின் - தலைவிபால் அப் பரத்தை மிக்க காதலையுடையளாதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள் என்று கூறாநிற்பரோ? ஆராய்ந்து ஒன்றனைக் கூறாய்; அங்ஙனம் ஆயின் மீட்டும் அவனை ஈங்கு நமது ஆற்றலானே கைக்கொண்டு போதுவாங்காண்!. எ - று.

    (வி - ம்) பரத்தை தான் தோழியென விளித்தலால், அவட்குத் தோழி விறலியென்பது. விறல் - சத்துவம்; அவை சிங்காரமுதலாய ஒன்பான் சுவையாமென்ப. அச்சுவைகள் தன் மெய்க்கண்ணே தோன்றுமாறு அவிநயத்திற் புலப்படுத்திக் காட்டவல்லவள் விறலி. உறைவி - உறைபவள். நலத்தோன் அளித்தல்: இரண்டன்றொகை. குவைஇ - திரண்டு. அங்ஙனமாயினென்பது முதற் குறிப்பெச்சம்.

    உள்ளுறை :- சிலம்பிலே செங்காந்தள் மலர்தலும் வண்டுகள் அருவியொலியொடு சேர மெல்லமெல்லப் பாடாநிற்குமென்றது, தலைவியொடு தலைவன் மகிழ்ந்திருப்பானாதலின் நாம் முழவு முதலியவற்றோடு பாடுகிற்போம்; அவன் நம் வயத்தவனாவானென்பதாம். ""ஏனோர்க்கெல்லாம் இடம்வரை வின்றே"" (தொல். பொ. 302) என்றதனாலே பரத்தை தானறிந்த கிளவியானே நிலம்பெயர்ந்துறையாத பொருள் கொண்டு உள்ளுறை கூறினாளென்பது. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - பரத்தை சூழ்தல்.

    (பெரு - ரை.) இனி இச் செய்யுளின்கண் ஊர் அவட்கு அவள் காதலள் என்னுமோ என்றதற்கு, இவ்வூரிலுள்ளார் அப் பரத்தையினும் காட்டில் அத் தலைவியே சிறந்த காதலையுடையாள் என்று கூறுவரோ? என்று பொருள்கோடலே சிறப்பு. இங்ஙனமின்றி ""தலைவிபால் அப்பரத்தை மிக்க காதலையுடையாள் ஆதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள்"" எனல் பரத்தைக்குப் புகழே பயத்தலின் அவ்வுரை பொருந்தாமை யுணர்க. இனி, தலைவி எம்மை நயந்து உறைபவளாதலின் யாம் நயந்தே தலைவனை நல்கினம் நலத்தோனும் அவள்பால் காதலின்றியே தன் சால்புடைமையான் அளிப்பவன் ஆகின்றான்; இதனை அறியாது இவ்வூர் அவனுக்கு அப் பரத்தையினும் அத் தலைவியே சிறந்த காதலள் என்னுமோ? யாம் விட்டது என்னாம்? உரை! என்று இச் செய்யுட்குப் பொருள்காண்டலே தகுதியென்க.

(176)