(து - ம்) என்பது, தலைமகன் தலைமகளை வைகிருளிலே கொண்டு தலைக்கழிந்ததனைச் செவிலியாலறிந்த நற்றாய், அஃது அறநெறியேயென நினைந்தும் அவளது இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்குகின்றாள். "என்னொரு மகள் பாலூட்டவும் உண்ணாது அழுபவளாய் நேற்றும் அத்தன்மையளாயிருந்தவள், இன்று ஒருவன் பின் சுரநெறியிலே சென்றனளென்பதை எவ்வாறு ஆற்றுவே"னென நொந்துகூறாநிற்பது.
(இ - ம்)இதற்கு, ""தன்னும் அவனும் ....................... நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய"" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.
| இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றெனப் |
| பந்துநிலத்து எறிந்து பாவை நீக்கி |
| அவ்வயிறு அலைத்தஎன் செய்வினைக் குறுமகள் |
| மானமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு |
5 | யானுந் தாயும் மடுப்பத் தேனொடு |
| தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி |
| நெருநலும் அனையள் மன்னே இன்றே |
| மையணற் காளை பொய்புக லாக |
| அருஞ்சுரம் இறந்தனள் என்பதன் |
10 | முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே. |
(சொ - ள்) இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என - மனை யகத்து முளைத்துப் படர்ந்த வயலைக் கொடியை ஆங்குக் கன்றையீன்ற பசுவானது சென்று தின்றதினாலே; பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி அ வயிறு அலைத்த என் செய்வினைக் குறுமகள் - அதுகண்டவுடன் தான் விளையாட்டயர்ந்துகொண்டிருந்த பந்தை நிலத்தெறிந்து போகட்டு ஒரையாடும் பாவையையும் அவ்வயின் வைத்துத் தனது அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட செய்யுங் காரியங்கள் வல்ல என் இளம்புதல்வி; மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு - மானின்பொருந்திய நோக்கம்போன்ற மையலைச் செய்யும் பார்வையுடனே; யானும் தாயும் மடுப்பத் தேனொடு தீம் பால் உண்ணாள் - யானுஞ் செவிலித்தாயும் தேனொடு கலந்த இனிய பாலையருந்துகவென்று ஊட்டவும் உண்ணாது; வீங்குவனள் விம்மி நெருநலும் அனையள் மன் - விம்மி அழுபவளாகி நேற்றும் அத் தன்மையளாயிருந்தனள். அங்ஙனம் செய்வதெல்லாம் கழிந்தது; இன்று மை அணல் காளை பொய் புகல் ஆக - இன்று கறுத்த அணலையுடைய காளையாவானது பொய்ம் மொழியே தனக்குப் பற்றுக்கோடாகக்கொண்டு; முருந்து ஏர் தன் வெண்பல் முகிழ் நகை திறந்து அருஞ் சுரம் இறந்தனள் (என்ப) - முருந்துபோன்ற தன் வெளிய எயிறுகளிலே தோன்று நகையைத் தோற்றுவித்து உடன்பட்டுச் செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றொழிந்தனள் (என்று கூறுவர்); இத்தகைய இளமையுடையாள் எங்ஙனம் சென்று மனையறம் பூண்டு ஒழுகா நிற்குமென்று அஞ்சுகின்றேன்? எவ்வண்ணம் ஆற்றுவேன்; எ - று.
(வி - ம்) அ - அழகு. அணல் - மோவாயின் கீழுள்ள தாடி. பொய் - "நான் செல்வமிக்குள்ளேன், வன்மையுடையேன், என் மனையகத்து நின்னைப் பாராட்டுநர் பல்லாயிரர்காண்" என்பது முதலாயின. புகல் - பற்றுக்கோடு. இத்தகைய என்பது முதற் குறிப்பெச்சம்.
வயலைக்கொடியை ஈற்று ஆ மேய்ந்தழித்தனை நோக்கி என் குறுமகள் வயிறலைத்து வருந்தியதுபோல அவளை ஏதிலாளன் துய்த்துக் கைக்கொண்டுபோக யான் வயிறலைத்துப் புலம்பாநின்றேனென்பது. மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.
(பெரு - ரை.) இதன்கண் தீம்பால் உண்ணாள் விம்மி நெருநலும் அனையள் என்றது அவளது இளமை சுட்டிப் புலம்பியதாம். அருஞ்சுரம் இறந்தனள் என்பது அவ்விள மகள் எங்ஙனம் அக் கொடிய சுரத்தைக் கடப்பளோ என்று அஞ்சியது. இல்லெழு வயலை ஈற்று ஆ தின்றென வயிறு அலைத்த குறுமகள் என்றது அவள் இயல்பாகவே பொருள்களைப் போற்றும் திறமுடையளாயிருந்தமை குறித்துப்பாராட்டியது என்க.
(179)