திணை : பாலை.

    துறை :இது, பிரிவிடையாற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

    (து - ம்.) என்பது, தலைவன் பிரிந்து வேற்றுநாட்டுச் சென்றபொழுது தலைவி வருந்துவதைக்கண்ட தோழி, அத்தலைமகளை நோக்கிப் பாலைவழிச் சென்ற தலைவர் நின் வருத்தம் நீங்கும்படி விரைவில் வாரா நிற்பரென ஆற்றுவிப்பது.

    (இ - ம்.) இதனைப் "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவியெல்லாம் என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
பருவரல் நெஞ்சமொடு பல்பட ரகல  
    
வருவர் வாழி தோழி மூவன் 
    
முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற் 
    
கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல் 
5
தெறலருந் தானைப் பொறையன் பாசறை 
    
நெஞ்ச நடுக்குறூஉந் துஞ்சா மறவர் 
    
திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக் 
    
கடாஅங் கழீஇய கதனடங் கியானைத்  
    
தடவுநிலை யொருகோட் டன்ன 
10
ஒன்றிலங் கருவிய குன்றிறந் தோரே 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ ! நெடுங்காலம் வாழ்வாயாக!; மூவன் முள் எயிறு அழுத்திய கதவின் கானலம் தொண்டிப் பொருநன் - மூவனென்பவனைப் போரில் வென்று அவனது நிரம்பிய வலியையுடைய முட்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்துவைத் திழைத்த வாயிற் கதவினையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனாகிய; வேன் வேல் தெறல் அரு தானைப் பொறையன் - வெல்லும் வேற்படையையுடைய பகைவராற் கடத்தற்கரிய சேனையையுடைய சேரலன்கணைக்காலிரும் பொறையானது; பாசறை நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சாமறவர் - பாசறையின் கண்ணேயுள்ள நெஞ்சு நடுங்குகையாலே கண்ணுறங்காத வீரர் யாவரும்; திரை தபு கடலின் இனிது கண் படுப்ப - அலையோய்ந்த கடல்போல இனி தாகக் கண்ணுறங்குமாறு; கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் தடவுநிலை ஒருகோடு அன்ன - மதநீரொழிந்த சினந்தணிந்த யானையின் பெரிதாய் நிலைத்துள்ள ஒரு மருப்புப்போன்ற; ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோர் - ஒன்றாகி விளங்கிய அருவியையுடைய மலைநெறியிற் சென்ற தலைவர்; பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் - நீ வருத்தமுற்ற வுள்ளத்தோடு கொண்ட பலவாகிய கவலையும் நீங்க விரைவில் வருவர் காண்; எ-று.

    (வி - ம்.) வருவர்கொல் என்ற பாடத்திற்குக் கொல் அசையெனக்கொள்க. படர்தல்-கருதுதல். முழுவலி - நிரம்பிய வலி. தடவு நிலை - பெரிதாய் நிற்றல். பகைவரை அட்டு அவர் பல்லைக் கொணர்ந்து தமது கோட்டைவாயிற் கதவில் வைத்துத் தைத்தல் பண்டை வழக்கு. இதனைக் "கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய, வன்கட் கதவின் வெண்மணி வாயில், மத்தி" (அகம். 210) என்ற செய்யுளானுமறிக, இதனுட் பொதிந்த கதை :-பொறையனது பாசறைக்கண்ணே ஒற்றைமருப்பையுடைய களிறொன்று, மதங்கொண்டு வீரர் துயிலாவாறு வருத்தி அப்பால் மதமடங்கிற்றென்பதாம். மறவர் இனிது கண்படுப்பக் கதனடங்கியானை யென்க. பருவரனெஞ்சமொடு பலபடர் என்றது அழிவில் கூட்டத்துப் பிரிவாற்றாமை. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) தடாஅநிலை ஒருகோட்டன்ன என்றும் பாடம். இதற்குப் பகைவராற் றடுக்கவொண்ணாத மறநிலையையுடைய என்று பொருள் கொள்க.

(18)