திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்) என்பது, குறையுறவறிந்த தோழி "இவனொரு குறையுடையான் போலும்" என ஆராய்ந்துணர நிற்குமிடத்துத் தலைமகன் தனது நெஞ்சம் குறை முடித்தல் வேண்டுமென்று முடிக்கக்கருதலும் அதனை நோக்கி நெஞ்சமே, கிடைத்தற்கரிய குறுமகள் இன்னகைக்கு மகிழ்ந்தோய், எஞ்ஞான்றும் கிடைக்கப்படாத பொருளை விரும்பியதனால் நீ இவ்வண்ணமே துன்பமெய்தி நெடுங்காலம் வாழ்ந்தொழிவாயாக"வென்று அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறலும்"" (தொல். கள. 11) என்னும் விதிக்கொள்க.

     துறை : (2) அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்) என்பது, இரவுக்குறி சென்று குறிமருண்டு இடையீடு படுதலாலே தலைவியை எய்தப்பெறானாய் நெஞ்சை நோக்கி முற்கூறியபடி கூறியதூஉமாம்.

     (இ - ம்) இதற்கு, ""பரிவுற்று மெலியினும்"" (தொல். கள. 12) என்னும் விதிகொள்க.

     துறை : (3) இடைச்சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉமாம்.

     (து - ம்) என்பது, வினைவயிற்சென்ற தலைமகன் சுரத்திடையே காதலியை நினைந்து மீண்டுவரக்கருதிய நெஞ்சைநோக்கி "அவளது இனிய நகை நோக்கி மகிழ்ந்தோய், அந்த மகிழ்ச்சி மேற்கொண்டு மீளுதலாலே நீ இங்ஙனமே துன்பெய்தி வாழ்வாயாக" வென்றதூஉமாகும். இதற்கு நிலம் பாலை. உரை மூன்று துறைகட்கும் பொருந்துமாறறிக.

     (இ - ம்) இதற்கு, ""மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்,"" (தொல். கள. 5) என்னும் விதிகொள்க.

    
நோவினி வாழிய நெஞ்சே! மேவார் 
    
ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த் 
    
திதலை யெஃகிற் சேந்தன் தந்தை 
    
தேங்கமழ் விரித்தார் இயல்தேர் அழிசி 
5
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் 
    
அரியலங் கழனி ஆர்க்கா டன்ன 
    
காமர் பணைத்தோள் நலம்வீ றெய்திய 
    
வலைமான் மழைக்கண் குறுமகள் 
    
சில்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே. 

     (சொ - ள்) நெஞ்சே மேவார் ஆர் அரண்கடந்த மாரிவண் மகிழத் திதலை எஃகின் சேந்தன் - நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தை தேம் கமழ் விரிதார் இயல்தேர் அழிசி - தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெல் இடை வண்டு மூசு நெய்தல் மலரும் - நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன - தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த "ஆர்க்காடு" என்னும் ஊரையொத்த; காமர் பணைத்தோள் நலம் வீறு எய்திய வலைமான் மழைக்கண் குறுமகள் - விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய தலைவியின்; சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோய் - சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; இனி நோ - அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; வாழிய - அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக; எ - று.

     (வி - ம்) சேந்தன் தந்தையாகிய அழிசியின் ஆர்க்காடன்ன குறுமகளெனக் கூட்டுக. வாழிய: இகழச்சிக் குறிப்பு. பலவாய அரணங்கடந்த அழிசியின் "ஆர்க்காடு" என்னும் ஊரின்கணுள்ள கழனி, பகைவர் நெருங்குதற்கு அரிதாதல் போல யாம் நெருங்குதற்கு அரியளாயினாளென்றவாறு. இது துன்பத்துப்புலம்பல். மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - தன்னுளத்தழுந்தல். ஏனைத் துறைகளுக்கும் மெய்ப்பாடு பயன் ஏற்றபெற்றிகொள்க.

     (பெரு - ரை) பொருளீட்டுதற் பொருட்டு முன்னர்த் தன்னை ஊக்கிப் பிரிவு சூழ்ந்த நெஞ்சம் உறுதியுடனில்லாமல் சுரத்திடையே தலைவியின் புன்முறுவலை நினைந்து மயங்குதலான் அதனை வைபவன் இனி நின்னை மீள விடேன்; நீ இங்ஙனமே நொந்து கிடக்கக் கடவை என்று ஒறுத்தபடியாம் என்க. (துறை - 3)

(190)