(து - ம்.) என்பது, தலைமகன் களவுப்புணர்ச்சியிலே நீட்டிப்ப ஆற்றாத தோழி உள்ளுறையால் வரைந்தெய்துமாறு கடாவுவாளாய்க் குறிப்பால் அவனை நோக்கிப் புலம்பனே! நீ விரும்பிய காதலியினுடைய கண்கள் மாறாது கலுழாநிற்கும்; அதனை யான் கண்டிருக்கின்றேனாதலின், நீ அவளை வரைந்து முயங்கியருளினாயல்லை; அங்ஙனம் அருளாமையானது கொடிதுகாணென வெகுண்டு கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய இலக்கணமே அமையும்.
| அருளா யாகலோ கொடிதே இருங்கழிக் |
| குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித் |
| 1 தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும் |
| மெல்லம் புலம்ப யான்கண் டிசினே |
5 | கல்லென் புள்ளின் கானலந் தொண்டி |
| நெல்லரி தொழுவர் கூர்வா ளுற்றெனப் |
| பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
| நீரலைத் தோற்றம் போல |
| ஈரிய கலுழுநீ நயந்தோள் கண்ணே. |
(சொ - ள்.) இருங் கழி நீர் நாய்க் குருளை - கரிய கழியின் கணுள்ள நீர்நாயின் குருளை; கொழுமீன் மாந்தித் தில்லையம் பொதும்பில் பள்ளிகொள்ளும் - கொழுவிய மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரப் பொந்துகளிலே பள்ளிகொள்ளா நிற்கும்; மெல்லம் புலம்ப - மெல்லிய கடற்கரையின் தலைவனே!; கல் என் புள்ளின் கானலம் தொண்டி - கல்லென ஒலிக்கின்ற புள்ளினங்களையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த தொண்டியின் கண்ணதாகிய வயலிலே; நெல் அரி தொழுவர் கூர்வாள் உற்று என - நெற்கதிர் அறுக்கும் உழவரினுடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனாலே; பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் - பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தன் மலர்; நீர் அலை தோற்றம் போல - நீரில் முங்கி அலைகின்ற தோற்றத்தைப்போல; நீ நயந்தோள் கண் ஈரிய கலுழும் - நீ விரும்பிய காதலியின் கண்கள் ஈரியவாய்க் கலுழாநிற்கும் ; யான் கண்டிசின் - அதனை யான் கண்டிருக்கின்றேன்; ஆதலின் நீயும் அவள் கலுழாதிருக்குமாறு வரைந்தருள செய்கின்றாயில்லை; அருளாய் ஆகல் ஓ கொடியது - இங்ஙனம் அருளாதிருப்பது ஓஒ கொடிதுகாண்! எ - று.
(வி - ம்.) ஆகல்: பிரிவிலசைநிலை. குருளை-இளங்குட்டி, தில்லை - உப்பு நீரருகே வளர்வதொரு மரம். இதனடிப்பொந்து தண்ணீரிலே தோயப் பெற்றிருப்பதால் பொதும்பிலே பள்ளி கொள்ளுவதியல்பு.
நின்னைக் கண்டவழி யுவத்தலின் அவள் அழுவதனை நீ யறிந்தாயல்லை; யான் கண்டுளேனென்றாள். இது, துன்பத்துப்புலம்பல்.
உள்ளுறை:- நீர்நாய்க்குருளை தன் விருப்பத்தின்படி மீனைத் தின்று கவற்சியின்றிப் பொந்துகளிலே பள்ளிகொள்ளுதல்போல, நீதானும் இரவெல்லாம் இவளது நலனுகர்ந்து மணம்புரியுங் கவலையென்பதின்றி நின்னூர்வயின் சென்று வைகுகின்றனை யென்றதாம்.
இறைச்சி:- தொண்டியின்கணுள்ள கானலிலே புள்ளினம் கல்லென ஒலிக்குமென்றது, ஊராரெடுத்த, பழிச்சொல் கல்லென ஒலியா நிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) ஊரவர் பழிச்சொல் நெஞ்சத்தே புண்செய்தலால் இவள் கண் கலுழும் என்பது தோன்ற நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்று அரியுண்ட நெய்தலை உவமை எடுத்தாள், அவள் கண்கள் உறங்கில என்பாள் கூம்பா நெய்தல் என்றாள்.
(195)
(பாடம்) 1. | திதலையம்; தில்லைப். |