திணை : பாலை.

     துறை : இது, பின் சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிந்த வழி பின்னே தேடிச் சென்ற செவிலி ஒரு தலைவனுந் தலைவியுமாக எதிரே வருவாரைத் தன்மகளும் மருமகனுமாமென மயங்கி அருகில் வருதலும் ஐயம் நீங்கிவிடலாய், இவள் என்மகள் போலுதலானே என் கண்ணீர் பெருகுவதுகாண்; அவள் இத்தன்மையளே; நும்மை விருந்தோம்புகிற்பேன்; அதற்குரிய அவள் தந்தையூர் இதுகண்டீர், யான் அவளை யீன்ற தாய்; அவளைப்பற்றி நீயிர் கூறுவீராயின், நுமக்கு அறமுண்டாகுமென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, “எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே” (தொல். அகத். 42) என்னும் நூற்பாவின்கண் அமைத்துக்கொள்க.

    
சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து 
    
ஓமை நீடிய கானிடை அத்தம் 
    
முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள் 
    
கண்பட நீராழ்ந் தன்றே தந்தை 
5
தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல் 
    
கோடேந்து அல்குல் அரும்பிய திதலை 
    
வாஅர்ந் திலங்குவால் எயிற்றுப் பொலிந்ததார்ச் 
    
சில்வளைப் பல்கூந் தலளே அவளே 
    
மையணல் எருத்தின் முன்பின் தடக்கை 
10
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் 
    
தந்தை தன்னூர் இதுவே 
    
ஈன்றேன் யானே 1 பொலிகநும் பெயரே. 

    (சொ - ள்.) சேயின் வரூஉம் மதவலி - சேய்மைக் கண்ணிருந்து வாராநின்ற அரசகுமாரனே!; யா உயர்ந்து ஓமை நீடிய கான் இடை அத்தம் - யாமரம் உயர்ந்து ஓமை மரம் நீடிய காடிடையிட்ட சுரத்திலே; முன் நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட நீர் ஆழ்ந்தன்று - நேற்று நெடுந்தூரஞ் சென்ற என் மகள் போல இவள் என்கண் எதிரே படுதலால் என்கண் நீர் நிரம்பப் பெருகாநின்றது; அவள் நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை வா அர்ந்து இலங்கு வால் எயிற்றுப் பொலிந்த தார்ச் சில்வளைப் பல் கூந்தலள் - அவள்தான் நுண்ணிய பலவாய வரி பொருந்திய அல்குலும் தோன்றிய சுணங்கும் நேர்மையுற்று விளங்கிய வெள்ளிய பற்களும் பொருந்திய பாதிரி மலர்ப் பிணையலும் சிலவாய வளையும் பலவாய கூந்தலும் உடையாள்; தந்தை தன் ஊர் இடவயின் தொழுவேன் - நிற்க, நும்மை அவள் தந்தையினூர் இடத்தில் விருந்தேற்று உபசரித்துத் தொழுகிற்பேன்; மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை வல் வில் அம்பின் எய்யா வன் மகிழ்த் தந்தை தன் ஊர் இதுவே - அவ்வண்ணம் நும்மை எதிர்கோடற்கு ஏற்ற மைபோன்ற கரிய அணலையும் பிடரியையும் வலிய நெடிய கையையும் வலிய வில்லினையும் அம்பையும் அளந்தறியா வண்மையையும் கள்ளுணவையுமுடைய தந்தையினது ஊர் இதுவே கண்டீர்; யான் ஈன்றேன் - யானே அவளை ஈன்று பாதுகாத்தேன்; நும் பெயர் பொலிக - எனது ஆற்றாமையைக் கண்ட நீயிர் அவளை எதிர்கண்டு பேசிய வகையை நுவலுவீராயின் நுமக்கு அறத்தாலாய புகழ் உண்டாகுக! எ - று.

     (வி - ம்.) மதவலி - அரசன், மத: விசேடித்த உரிச்சொல்.

     சிறிதும் ஐயமில்லையென்பாள் தேற்றத்தால் முன்னின்றாளை என் மகளே யென்றாள். அன்பின் மிகுதியாலே கண்ணீராழ்ந்தமை கூறினாள். தான் செவிலியென்பதனை அறிவுறுத்துவாள் தொழுவலென்றாள். அவன் அரசகுமரனாதலின், நும்மையெதிரேற்று முகமன் வழங்குந்தகுதிப்பாடு உடையவனென அவள் தந்தையைச் சிறப்பித்துக் கூறினாள். வருத்தமிகுதியுடையளென்று கருதி மகளொடு நுவன்றவை கரவாது கூறும்பொருட்டு ஈன்றேன் யானே என்றாள்; இஃது அன்பு மிகுதிபற்றி.

    மூலத்தொடு வரைந்த குறிப்பு:- [தந்தையூரிதுவென்றது, அவள் (செவிலி) விருந்தோம்பத் தங்கிப்போகலா மென்றவாறு. ஈன்றேன் யானென்றது, எனதாற்றாமை கண்டாற் சொல்லுவார்க்கறமுண்டென்றவாறு. பெயரென்பது சொல்லுக்கு மறுமாற்றம்.] மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த உவகை. பயன் - தலைமகளைக் காண விரும்பல்.

     (பெரு - ரை.) மதவலி - அன்மொழித்தொகை. மிகவும் வலிமையை உடையோய் என விரித்திடுக. யா - ஒரு மரம். என் மகள்போலக் கண்ணிற்படுதலால் என்க. இத்தகைய உறுப்படையாளமுடையாள் ஒருத்தியை நீயிர் நும்மெதிர் கண்டனிரோ என்று குறிப்பால் வினவுவாள் நுண்பல்..........................கூந்தலள் என்று அடையாளம் கூறினள். பெயர் - புகழ்.

(198)
  
 (பாடம்) 1. 
பொலிக நும்புகழே,