திணை : மருதம்.

    துறை : (1) இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் யாரையும் அறியே னென்றாற்குத் தலைவி சொல்லியது.

    துறை : (2) வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉமாம். உரை இரண்டற்கும் ஒக்கும்.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் யாரையும் அறியேனென்றலும் தலைவி அவனை நோக்கி 'நின் மார்பிலே துஞ்சி இப்பொழுது அவ்வின்பத்தைப் பொருளாய்த் தெருவிடைப் போந்த அப்பரத்தையை யாம் கண்டேம்; அங்ஙனமாக நீ ஏன் வீணாகப் பொய் புகலுகின்றனை'யென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) (1) இதற்குப்,

  
"புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு  
  
 அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி 
  
 இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி 
  
 எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்"     (தொல்-கற்- 6)  

என்னும் விதி கொள்க.

    (இ - ம்.) (2) இனி, இரண்டாவது துறைக்கு, "உணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்" (தொல்-கற். 9) என்னும் விதி கொள்க. அஃதாவது, தோழி ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தளாய் நின்று தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம்போந் தன்மை உண்டாக்கிய தகுதிக்கண் தலைவனுக்கு வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆகும் என்பதாம்.

    
ஐய குறுமகட் கண்டிகும் வைகி  
    
மகிழ்நன் மார்பில் துஞ்சி யவிழிணர்த்  
    
தேம்பாய் மராஅங் கமழுங் கூந்தல் 
    
துளங்கிய லசைவரக் கலிங்கந் துயல்வரச்  
5
செறிதொடி தெளிர்ப்ப வீசி மறுகிற் 
    
பூப்போ லுண்கண் பெயர்ப்ப நோக்கிச் 
    
சென்றனள் வாழிய மடந்தை நுண்பல் 
    
சுணங்கணி வுற்ற விளங்கு பூணள் 
    
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப் 
10
பழம்பிணி வைகிய தோளிணைக்  
    
குழைந்த கோதைக் கொடிமுயங் கலளே. 

    (சொ - ள்.) ஐய மடந்தை மகிழ்நன் தங்கி மார்பில் துஞ்சி ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; தேம் பாய் மராஅம் கமழுங் கூந்தல் துளங்கு இயல் அசைவர - வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடப்ப மரத்தின்விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து வீழ்ந்து அசையா நிற்ப; கலிங்கம் துயல்வர - இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப; செறிதொடி தெளிர்ப்ப வீசி -நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு; பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி மறுகில் சென்றனள் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நிலைபெயர்ந்து சுழலும்படி நோக்கி எமது மறுகின்கட் சென்றனள்; விளங்கு பூணள் நுண்பல் சுணங்கு அணிவுற்ற - நின்னைப் பிரிதலாலே விளங்கிய பூண்களுடனே நுண்ணிய பலவாய சுணங்கு அணியப் பெற்றவளாய்; மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர்குழை - முன்பு நின் மார்பினுற்ற முயக்கத்தில் நெரிந்த சோர்கின்ற குழையையும்; பழம்பிணி வைகிய இணைத்தோள் - நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும்; குழைந்த கோதைக் கொடி முயங்கலள் - துவண்ட மாலையையுமுடைய கொடிபோன்று நின் முயக்கம் நீங்கினவளாகி எமது மறுகின்கட் சென்றனள்; குறுமகள் கண்டிகும் - அத்தகைய இளம் பிராயத்தளாகிய பரத்தையை யாம் கண்டேம்; வாழிய - அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக; எ - று.

    (வி - ம்.)மறுகிற் சென்றனளென்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மகிழ்நன் : முன்னிலையிற் படர்க்கைவந்த வழுவமைதி. [இரண்டாந்துறைக்குப் படர்க்கையாகவே பொருள் கொள்க. அதற்கு ஐய என்பதனை மெல்லிய எனப் பொருள்படுத்துக.] மராங்கமழும் கூந்தல் - பரத்தையைக் காவிற் பூச்சூட்டி விழாவயர்ந்தது கூறிப் புலந்தவாறு, கூந்தலசைவரல் - கூழை விரித்தலென்னு மெய்ப்பாடு. கலிங்கந் துயல்வரல் - உடை பெயர்த்துடுத்தலென்னு மெய்ப்பாடு. தொடிதெளிர்த்தல் - ஊழணி தைவரலென்னு மெய்ப்பாடு. இவை புணர்ச்சியீற்றில் நிகழ்வன : இவற்றைக் கூறவே 'நென்னல் நின்னைப் புணர்ந்த குறிப்பை யாம் நோக்கி யேக்கமுற அக் குறிப்புக்களோடு மறுகில் வந்தா' ளென்று கூறியது. இது பின்னும் புலவி நீட்டத்துக்குத் தலைக்கீடாயிற்று. வாழிய - இகழ்ச்சிக் குறிப்புமாம். தலைவன் தன்பால் வந்தமையால், இங்ஙனங் கூறிப் புலவிதீர்கின்றாளாவது கேட்ட தலைமகன், நம்மாட்டுப் பெரிதுமொரு குற்றங்கண்டும் அருளிப்பாடிட்டமையின் இனிப் பரத்தையைக் கருதலேமெனக் கொள்வானாவது. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - புலவிதீர்ந்து புணர்ச்சியின் மகிழ்தல்.

    (பெரு - ரை.) இனி இரண்டாவது துறைக்கு, அஃதாவது தோழி கூற்றாக்குங்கால்; "வைகி மகிழ்நன் ..... கொடி முயங்கலள்" என்னுந் துணையும் தலைவியின் கூற்றைத் தோழி கொண்டு கூறி இவ்வாறு நீ படைத்துக்கொண்டு நம் பெருமான்பால் அடாப்பழி கூறி ஊடுதற்குக் காரணமான அப்பரத்தை மகள் தானும் ஐய குறுமகள் கண்டிகும் - மெல்லிய சிறுமியே ஆவள் அவளை யாமும் கண்டேங்காண் ! என்று பொருள்கூறி அக் காமஞ் சாலாச் சிறுமியைத் தலைக் கீடாகக்கொண்டு நீ ஊடியிருத்தல் அறிவுடைமையன் றென்பது குறிப்பெச்சமாக்குக. இதனாற் பயன் - தலைவி தன் பிழையுணர்ந்து ஊடல் தீர்தலாம் என்க.

    இனி நுண்பல் சுணங்கு அணிவுற்ற விளங்குபூணள் என்று சொற் கிடந்தவாறே பொருள் கோடலே அமையும் என்க.

(20)