திணை : நெய்தல்.

     துறை : இது, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லி வரைவு கடாயது.

     (து - ம்.) என்பது, களவுப் புணர்ச்சியில் வரைவு நீட்டித்த தலைமகன் மறைவாகிய .ஓரிடத்தில் வந்திருப்பதையறிந்த தோழியானவள் அவன் கேட்டு விரைய வரையுமாற்றானே தலைவியை நோக்கிக் "கானலிடத்தும் நம் கணவனோடு உற்ற நம்மில் ஒருவரையொருவர் பிரிந்தால் பிழைப்பது அரிதென்னாமல் அலரெழுந்து அவரை இங்கு வாராவண்ணம் தடுத்ததுமன்றி அதுகாரணமாக இவ்வூர் வருந்துதலையுஞ் செய்கின்றது ; இஃதென்ன கொடுமை"யென நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியின் கண் அமைத்துக் கொள்க.

    
முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த் 
    
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு 
    
அகமடற் பொதுளிய முகைமுதிர் வான்பூங் 
    
கோடுவார்ந் தன்ன வெண்பூத் தாழை 
5
எறிதிரை உதைத்தலிற் பொங்கித் தாதுசோர்பு 
    
சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலா மறுக்கும் 
    
மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை 
    
ஒருநாள் பிரியினும் உய்வரிது என்னாது 
    
கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச் 
10
செய்ததன் தப்பல் அன்றியும் 
    
உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே. 

    (சொ - ள்.) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த் தடந்தாள் தாழை - ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள் உடை நெடுந் தோட்டு அக மடல் பொதுளிய - முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; முகைமுதிர் வான்பூங் கோடு வார்ந்து அன்ன வெள் பூத் தாழை - அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு - எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் மணம் கமழ் கானல் - சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும் மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; இயைந்த நங்கேண்மை ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது - காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; கதழ் பரி நெடுந்தேர் வரவு ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும் - விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இவ் அழுங்கல் ஊர் உயவுப் புணர்ந்தன்று - இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!; எ - று.

     (வி - ம்.) ஒருநாள் பிரியினும் உய்வதரிதென்றதனால் இனி வரைந்து தலையளி செய்யாவிடின் இறந்துபடுமென்றறிவுறுத்தினாள். ஊரின் கௌவை மேலிட்டதன்றியும் தேர்வருகையை உசாவாநிற்குமென்றதனாலே இனிக் களவொழுக்க மியலாமை யறிவுறுத்தினாள். இஃது அவள் புணர்வு மறுத்தல். உய்வரிதென்றது, துன்பத்துப் புலம்பல்.

     உள்ளுறை :- அலைமோதுதலாலே தாழையின் மகரந்தம் உதிர்ந்து மறுகிலுள்ள புலவுநாற்றத்தை நீக்குதல்போலத் தலைவனை அவாவானது தூண்டுதலாலே அவன் பொருளை எமரில்லத்துக் கொணர்ந்து குவித்து வரைந்து ஊரிலெழுந்த அலரைப் போக்குவானாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) முதிர்ந்த தாழைமலர் திரைமோதுதலானே பொங்கித் தாதுதிர்த்துப் பாக்கத்து மறுகுபுலவு தீர்க்கும் என்பதன்கண் உள்ளுறை பொருள், காதல் முதிர்ந்த தலைவனாகிய நீ நின்னுடைய களவொழுக்கம் பற்றி ஊரில் அலரெழுந்து நின்னை வரைதற்கு வற்புறுத்துதலாலே நீ கிளர்ந்து வரைவொடு வந்து ஈண்டு அலர் தூற்றுவார் புன்மையை ஒழிக்க வேண்டும் என்பதாம் என்க.

    உயவு - என்பதற்கு ஆராய்தல்; வருந்துதல் என்னும் இருபொருளும் உண்மையின் இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் இவ்வூர் தேர்வருகைக்குக் காரணம் ஆராய்தலோடு அதன்வழிப் பெருந் துன்பத்தையும் கூட்டுகின்றது எனப் பொருள் கொள்க.

(203)