(து - ம்.) என்பது, தோழி வினைவயிற்பிரியுந் தலைவனை நோக்கி "நீ இவளைக் கைவிட்டு வினைமேற் செல்லுவையாயின் இவளது மாமையினழகு இன்றோடு போயிற்றுக்கா"ணென அழுங்கிக் கூறாநிற்பதுமாகும்.
(இ - ம்.) இதற்கு, ""பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்,"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து |
| ஆளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப் |
| பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி |
| ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்குந் |
5 | துன்னருங் கானம் என்னாய் நீயே |
| குவளை உண்கண் இவளீண்டு ஒழிய |
| ஆள்வினைக் ககறி யாயின் இன்றொடு |
| போயின்று கொல்லோ தானே படப்பைக் |
| கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் |
10 | நீர்மலி கதழ்பெயல் தலைஇய |
| ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. |
(சொ - ள்.) அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து நல் ஆளி மான் - நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; வேட்டு எழு கோள் உகிரப் பூம்பொறி உழுவை தொலைச்சிய - இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக் கயிறு இழுக்கும் - கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; துன் அருங்கானம் என்னாய் - பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீயே குவளை உண்கண் இவள்ஈண்டு ஒழிய ஆள்வினைக்கு அகறியாயின் - நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; படப்பைக் கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர்மலி கதழ் பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவின் - கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றொடு போயின்று - இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக! எ - று.
(வி - ம்.) ஆளி - சிங்கத்தின் வேறுபட்டது.
மாமைக்கவின் இனி எய்துவதரிதென்பான், இன்றோடே போயதென இறந்தகாலத்தாற் கூறினான். இதனினும் ஆள்வினை சிறந்த தாயினும் கானின் கொடுமையைக் கருதின் அஃது அத்துணைச் சிறப்பிலதென நெறியின் தருமை கூறி அறிவுறுத்தினானாம்.
இறைச்சி:- புலிதொலைச்சிய களிற்றை ஆளி இரையாக உண்ணக் கருதி யிழுத்துண்ணுங் கானமென்றது, நின்னால் நலனுணப்பட்ட இவளது மேனியழகைப் பசலையுண்டு கெடுக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்கல்.
இரண்டாந்துறைக்கு இவையனைத்துந் தோழி தலைவனை விளித்துக் கூறியதாகக் கொள்ள உரையொக்கும். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை) ஆளிமான் உழுவை தொலைச்சிய களிற்றை இழுக்கும் என இயைபுகாண்க. வைந்நுதி ஏந்து வெண்கோடு என்பதற்கு கூரியநுனி உயர்ந்த வெளிய கோடு எனினுமாம். கவின் இன்றோடு போாயின்று என இயைக்க. கொல், ஓ: அசைகள்.
(205)