திணை : நெய்தல்.

     துறை : இது, நொதுமலர் வரைவுழித் தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.

     (து - ம்.) என்பது, "தலைவியை வேற்றுமாக்கள் மணஞ்செய்து கொள்ள வேண்டி வருவதனையறிந்த தோழி, தன் தாயாகிய செவிலியிடஞ் சென்று "அன்னாய்! முன்பு களவொழுக்கத்திலே கலந்த கேள்வருடைய தேர் வருவது நிறுத்தப்பட இயலாதது; வந்தவர்தாம் வறிதே பெயர்வரோ? நம் இளமகளை வேற்றுவரைவிற் படுத்தினிரேல் கொலைவெய்ய சிறுவர் கைப்பட்டனளேயா"மென முன்பு நிகழ்ந்த களவொழுக்கத்தை வெளிப்படுத்தித் தெளியக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "முன்னிலை அறன் எனப்படுதல் என்றிரு வகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்” (தொல். கள. 23) என்னும் விதியினாலமைத்துக் கொள்க.

    
கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை 
    
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் 
    
கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென 
    
நெடுந்தேர் பண்ணி வரலா னாதே 
5
குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி 
    
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல் 
    
இளையரும் முதியருங் கிளையுடன் குழீஇக் 
    
கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நாம்பின் 
    
முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் 
10
வலையுந் தூண்டிலும் பற்றிப் பெருங்கால் 
    
திரையெழு பௌவம் முன்னிய 
    
கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே. 

    (சொ - ள்.) கழி சூழ் கண்டல் வேலிப் படப்பை - அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முண்டகம் வேய்ந்த குறு இறைக் குரம்பை - முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல் என் - கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடுந்தேர் பண்ணி வரல் ஆனாது - நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர் பெயர்வர் கொல் - மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம் வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; அல்கல் இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக் கோள் சுறா எறிந்தெனச் சுருங்கிய நாம்பின் முடி - இரவில் இளைஞரும் முதியோரும் தம் உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் - முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; வலையும் தூண்டிலும் பற்றிப் பெருங்கால் திரை எழு பௌவம் முன்னிய - அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலை வெம்சிறார்ப் பால் பட்டனள் - கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்? எ - று.

     (வி - ம்.) குறுமகள் சிறார்பாற் பட்டனளெனக் கூட்டுக. இளையரும் முதியருமாகக் கூடிமுடிகின்ற பரதவர். நாம்பு - மெல்லிய கொடி: மெல்லிய நாருமாம். பட்டனளெனத் தெளிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினள். இனிக் கூறியாவதென் என்பது சொல்லெச்சம், குறியிறை - குறிய இறப்பு.

     நம்மின் மிக்க செல்வமுடைய காதலரென்பாள் தேரொடும் வருதல் கூறினாள். அத்தகையார் இழிந்த பாக்கத்து வருகின்றனரென இவள்பாற்கொண்ட வேட்கைமிகுதி கூறினாள். பிறர்வரையப் புகுவோர் இழிதக்காரென்பாள் வலையுந்தூண்டிலும் பற்றிய சிறாரெனக் கூறினாள். கொலைவெஞ்சிறார் பாற்பட்ட இவள் உய்யாளென இறந்து பாடு குறித்தாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வெளிப்படையாக அறத்தொடு நிற்றல்.

(207)