(து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்தானது குறிப்பறிந்து தலைமகள் வருந்துதலும் அதுகண்ட தோழி "நீ ஏன் வாடுகின்றனை, அவர் செல்பவரல்லர்: செல்லிற் காமநோய் பொறுப்பவருமல்லர், பொருள் முடியாதாயினும் வருவர்காண்: இம்மழைக் குரல் பிரிந்தோரை நாடித் தருவதுபோலு"மெனத் தேற்றிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “பெறற்கரும் பெரும்பொருள்“ (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி |
| அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப |
| விளிவிலா 1 கலுழுங் கண்ணொடு பெரிதழிந்து |
| எவனினைபு வாடுதி சுடர்நுதற் குறுமகள் |
5 | செல்வர் அல்லர் 2 நங்காதலர் செலினும் |
| நோன்மார் அல்லர் நோயே மற்றவர் |
| கொன்னு நம்பும் குரையர் தாமே |
| சிறந்த அன்பினர் சாயலும் உரியர் |
| பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் |
10 | முடியா தாயினும் வருவர் அதன்றலை |
| இன்றுணைப் பிரிந்தோர் நாடித் |
| தருவது போலுமிப் பெருமழைக் குரலே. |
(சொ - ள்.) சுடர் நுதல் குறுமகள் - விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; விறல்சாய் விளங்கு இழை நெகிழ - நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; தெள் மணி போல் அறல் முலையிடை நனைப்ப - முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; விளிவு இலா விம்மிக் கலுழும் கண்ணொடு - நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிது அழிந்து எவன் நினைவு வாடுதி - பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் செல்வர் அல்லர் செலினும் நோய் நோன்மார் அல்லர் - நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர் கொன்னு நம்பும் குரையர் - அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; சிறந்த அன்பினர் சாயலும் உரியர் - நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; பிரிந்த நம்மினும் இரங்கி - அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; அரும்பொருள் முடியாதாயினும் வருவர் - தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன்தலை இப் பெரு மழைக்குரல் - அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இன் துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் - இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்! எ - று.
(வி - ம்.) விறல் - வலிமை. சாய்தல் - உள்ளுதனுணுக்கம். அறல் - நீர். நினைபு - நினைத்து. நோன்றல் - பொறுத்தல்: நோன்மார் - பொறுப்பவர். கொன்: பெருமையுணர்த்திய உரிச்சொல். நம்பு - விருப்பம். குரை : அசைநிலை இடைச்சொல். சாயல் - மென்மை. ஆதலின் நீ வருந்தாதேயென்பது குறிப்பெச்சம். பெரிதழிந்து வாடியது - துன்பத்துப்புலம்பல்.
அங்ஙனம் வாராது நீட்டித்தாலும் இம் மழையைக் கண்டவளவிலே தமியராய் ஆங்குத் தங்கலரென்னுங் கருத்தால் குரல் தருவதுபோலுமெனக் கூறினாள். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) தெண்மணி போல் அறல் என மாறுக. மணி -ஈண்டுமுத்து. இவன் இனைபு வாடுதி எனக் கண்ணழித்துக் கோடலுமாம். அப்பொழுது கார்ப்பருவந் தொடங்குதல் காட்டி இப்பருவத்தே அவர் பிரிவு சூழார்காண் என்று ஆற்றுவிப்பாள் பெருமழைக் குரல் நாடித் தருவது போலும் என்றாள் என்க.
(208)