(து - ம்.) என்பது, களவொழுக்க மேற்கொண்ட தலைமகன் மணஞ்செய்து கொள்ளாது நீட்டித்தலாலே தலைவி ஒருபடியாக ஆற்றாளாமென்று அறிந்த தோழி, ஆங்கு ஒருபுறம் வந்திருந்த தலைவன் அறிந்து விரைய மணம் புரிந்து கொள்ளுமாறு உள்ளுறையாலே தலைவி படுந் துன்பத்தைக் கூறி வெளிப்படையாலே கொண்கன் பிரிந்தனனென்று நொந்து யாவரிடத்தில் உரைப்பேனென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “களனும் பொழுதும்.....................ஆங்கதன் தன்மையின் வரைதல் வேண்டினும்” (தொல். கள. 23) என்னும் விதியாலமைத்துக் கொள்க.
| யார்க்குநொந் துரைக்கோ யானே ஊர்கடல் |
| ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவின் |
| கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த |
| கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய |
5 | முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை |
| எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் |
| துறுகடல் தலைய தோடுபொதி தாழை |
| வண்டுபடு வான்போது வெரூஉந் |
| துறைகெழு கொண்கன் துறந்தனன் எனவே. |
(சொ - ள்.) ஊர் கடல் ஓதம் சென்ற உப்பு உடைச் செறுவில் - ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; கொடுங்கழி மருங்கின் இரைவேட்டு எழுந்த கருங்கால் குருகின் - வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; கோள் உய்ந்து போகிய - குத்துக்குத் தப்பிப் பிழைத்தோடிய; முடங்குப் புற மோவாய் இறவின் ஏற்றை - வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறுகடல் தலைய தோடு பொதி தாழை - மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுபடு வான்போது வெரூஉம் துறைகெழு கொண்கன் - வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; துறந்தனன் எனவே யான் யார்க்கு நொந்து உரைக்கோ - என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்! எ - று.
(வி - ம்.) குருகு - நாரையின் பகுதியாகிய "நெடலை, வக்கா" முதலாயின; இவையே தாழம்பூ மோத்தைபோ லிருப்பன. இது தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு கூறியது.
வரையாதொழுகினும் அவனே மணமகனென அவனறியுமாறு கொண்கனெனக் கூறினாள். கொண்கன் - திணைப்பெயரே யன்றிக் காதலனெனும் பெயரையுமுடைமையின் களவுக்காலத்துப் பிரிவாதலின் எவரிடத்தும் புலப்படுத்தற்கு இயையாமையின் "யார்க்கு நொந்துரைக்கோ யானே" எனத் தானே புலம்பியதாம்.
உள்ளுறை:- இரைதேடி வந்த குருகு பற்றுதலைத் தப்பியோடிய இறாமீன் தாழம்பூவை நோக்கிக் குருகெனக் கருதி அஞ்சுமென்றது, ஊரார் பழி தூற்றத் தொடங்கலும் அதற்கஞ்சிய தலைவி அன்னையைக் கண்டவிடத்தும் ஏதிலாட்டியர் கூற்றை மேற்கொண்டு சினந்து வருவாள் கொல்லோவென அஞ்சாநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவனை வரைவுடன் படுத்தல்.
(பெரு - ரை.) உப்புடைச் செறு - உப்பளம். கோடு - கரை. துறுகடல் - செறிவுடைய கடல். வான் போது - வெண்டாழை மலர்.
(211)