திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைமகள் வாயில் மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் மீண்டுவந்து தலைவி புலந்திருப்பது அறிந்து அப்புலவியைத் தணிக்கவேண்டித் தோழியை விடுப்ப அத் தோழியைத் தலைவிநோக்கி "நம் மலைநாடன் மிக இனியனாயினும் புலவி நீக்கிக்கூடுதல் நல்ல இன்பத்தைத் தருதலால் யான் ஊடுகிற்பேன்கா"ணென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை...............வாயிலின் வரூஉம் வகை" (தொல். கற். 6) என்னும் விதி கொள்க.

    
இசைபட வாழ்பவர் செல்வம் போலக் 
    
காண்டொறும் பொலியுங் கதழ்வாய் வேழம் 
    
இருங்கேழ் வயப்புலி வெரீஇ அயலது 
    
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் 
5
பெருஞ்சினந் தணியுங் குன்ற நாடன் 
    
நனிபெரிது இனியன் ஆயினுந் துனிபடர்ந்து 
    
ஊடல் உறுவேன் தோழி நீடு 
    
புலம்புசேண் அகல நீந்திப் 
    
புலவி உணர்த்தல் வண்மை யானே. 

    (சொ - ள்.) தோழி இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம் - தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; இருங்கேழ் வயப் புலி வெரீஇ அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் - தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய நம் காதலன்; நனி பெரிது இனியன் ஆயினும் நீடு புலம்பு சேண் அகல நீந்திப் புலவி உணர்த்தல் வண்மையான் - பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; துனி படர்ந்து ஊடல் உறுவேன் - யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்! எ - று.

    (வி - ம்.) கதழ்வு - விரைவு. வெரீஇ என்னுஞ் செய்தெனெச்சத்தை வெருவ என்னுஞ் செயவெனெச்சமாகத் திரித்து ஏதுப்பொருட் டாக்குக.

     பிரிந்த காலத்துத் தான் உற்ற வருத்தம் தலைவனும் படுவதைத் தான் நேரிற் பார்க்க வேண்டுங் கருத்தால் ஊடலுறுவேனென்றாள். அங்ஙனம் ஊடியவழி அவன் உணர்த்தல் இன்பநனிபயப்பதனை "இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல், வல்ல தவரளிக்கு மாறு" (குறள் - 1321) என்றதனானும் அறிக.

    உள்ளுறை: களிற்று யானை தன்னிடத்துப் புலி யஞ்சியோடுதலாலே தான்கொண்ட சினத்தை அயலிலுள்ள வேங்கையை மோதித் தணியாநிற்கும் என்றது, தலைவி கொண்ட புலவிக்குத் தலைவன் அஞ்சியகலுதலாலே அவன்பாலுற்ற பரத்தைமையை இகழ்ந்துகூறி அச் சினம் தணியாநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி, பயன் - வாயின் மறுத்தல். இது நிலத்தாற் குறிஞ்சி.

     (பெரு - ரை.) "புலம்பு சேண் அகல நீக்கி" என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமாம். வேழம் புலிக்கு வெருவி அதனோடு பொராது அயலுள்ள வேங்கை ஊறுபடப் பொருது தன் சினந்தணியும் என்றே கொண்டு யான் பிரிவுக்கு வருந்தியும் அவன்மேலுற்ற சினத்தை ஊடலின் வாயிலாகத் தணித்துக் கொள்வேன் என்பது உள்ளுறையாகக் கோடலுமாம். இச் செய்யுட் கருத்தொடு,

  
"புல்லா திராஅப் புலத்தை அவருறும் 
  
அல்லனோய் காண்கஞ் சிறிது"         (குறள் - 1301)  

எனவருந் திருக்குறளையும் நினைவு கூர்க.

(217)