(து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்க மேற்கொண்டு ஒழுகுபவன் ஒருநாள் பைய ஒருபுறமாக வருதலையறிந்த தோழி உள்ளுறையால் தலைவியை இல்லிடத்துச் செறித்ததையும் குறிப்பால் அவன் இன்றியமையாமையையும் அறியப்படுத்தி வரைவுகடாவுவாளாய்த் தலைவியை நோக்கித் தோழி! நீ அவருடைய குன்றத்தையேனுங் கண்டு மகிழும்படி வேங்கையிலே கட்டிய கயிற்று ஊசலிலே நின்னைவைத்து வீசியாட்டவோ ஒன்று கூறாயென அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்...............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை |
| வடுக்கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக் |
| கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென |
| விசும்பாடு ஆய்மயில் கடுப்பயான் இன்று |
5 | பசுங்கா ழல்குல் பற்றுவன் ஊக்கிச் |
| செலவுடன் விடுகோ தோழி பலவுடன் |
| வாழை ஓங்கிய வழையமை சிலம்பில் |
| துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது |
| பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர் |
10 | சேணெடுங் குன்றங் காணிய நீயே. |
(சொ - ள்.) தோழி பலவுடன் வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் - தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துஞ்சு பிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது பெருங்களிறு பிளிறும் - துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலை அவர் சேண் நெடுங் குன்றம் நீ காணிய - சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கருங் கால் வேங்கைச் செவ் வீ வாங்கு சினை வடுக்கொளப் பிணித்த - கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; முரி விடு முரற்சிக் கை புனை சிறு நெறி வாங்கி - வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; பையென யான் இன்று அல்குல் பசுங் காழ் பற்றுவன் விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப ஊக்கிச் செலவுடன் விடுகோ - மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்! எ - று.
(வி - ம்.) முரி - முரிவு, ஒடிவு. முரற்சி - கயிறு. நெறி - நெறிப்பு; புரியின் முடக்கம்.
மனைவயிற் காவற்படுத்தியதனாலே தலைவனை முயங்கவும் காணவும் இயையாமையால் அவன் குன்றத்தை நோக்கியேனுஞ் சிறிது ஆறுதல் கொள்ளுமாறு மனைமுன்றிலின்கணுள்ள வேங்கையிலே தொடுத்த ஊசலில் வைத்து நின்னை யாட்டுகோவென்றாள்; வீசியாட்டும்பொழுது உயரப்போகுங் காலத்து அவன் குன்றங் காணப்படுமாதலால். இஃது இல்வயிற்செறித்ததும் அவன் இன்றியமையாமையுங் கூறியதாயிற்று. இனிக் களவுநிகழ்தற்கின்மையானும், பிரிவாலே தலைவி இறந்துபடுமாகலானும் கேட்ட தலைவன் வரைந்து எய்துவதன்றி வேறு செய்யக் கிடந்ததின்மையின் வரைவுகடாவாயிற்று.
உள்ளுறை :- பிடியை மேகம் மறைத்தலாலே அதனைக் காணாது களிறு பிளிறுமென்றது, தலைமகளை இற்செறித்தலானே தலைமகன் குறியிடம் புகுந்து அவளைக் காணாது வருந்தாநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) விடுபுரி முரற்சி என்றும் பாடம். கைபுனைமுரற்சி வாங்கி என மாறுதலுமாம். 'பற்றுவனன்' என்றும் பாடம். பற்றுவனன்: முற்றெச்சம். 'பலவுடன்' என்பதற்குப் பலாமரங்களோடு எனினுமாம். சேண் நெடுங் குன்றம் என்பதற்குத் தொலைவிலுள்ள நெடிய குன்றெனினுமாம்.
(222)