திணை : நெய்தல்.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, மணஞ்செய்துகொள்ளாது களவுப்புணர்ச்சியே, கருதிவந்து ஒழுகுந் தலைமகனைத் தோழி குறியிடத்துச்சென்று தொழுது முன்நின்று நின்னால் அருளிப்பாட்டொடுசெய்த தலையளிதான் பலரானும் அறியப்பட்டு அலராயிற்று, இனி இவள் இறந்துபட்டொழியினும் இப்பொழுது உண்டாகிய பழிச்சொல் நீங்குவதொன்றன்று, இன்னாமையுடையதுகாண் என வரைவுதோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை ''களனும் பொழுதும்.....அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.

    
அறிந்தோர் அறனிலர் என்றலர் சிறந்த 
    
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே 
    
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த 
    
பின்ஈர் ஓதியென் தோழிக்கு அன்னோ 
5
படுமணி யானைப் பசும்பூண் சோழர் 
    
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் 
    
கள்ளுடைத் தடவின் புள்ளொலித்து ஓவாத் 
    
கௌவையா கின்றது ஐயநின் அருளே. 

     (சொ - ள்.) ஐய புன்னை அம்கானல் புணர்குறி வாய்த்தபின் ஈர்ஓதியென் தோழிக்கு - ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; அன்னோ நின் அருள் படுமணி யானைப் பசும்பூண் சோழர் - ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் - கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள் உடைத் தடவில் புள் ஒலித்து - கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன கௌவை ஆகின்றது - நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோர் அறன் இலர் என்றலர் சிறந்த - அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; இன் உயிர் கழியினும் நனி இன்னாது - அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்! எ - று.

     (வி - ம்.) அன்னோ: இரக்கச்சொல். தடவு - சாடி; பானையுமாம். புள் - வண்டு. படுதல் - ஒலித்தல். இஃது ஈரமில்கூற்றம் ஏற்றலர் நாணல்.

     அறிந்தோரெனப்படுவார் களவுதீதென்பதறியாரோ? அஃதறியாராயின் அவர் எவ்வாறு அறனுடையவராவார்? ஆதலின் அவர் அறனிலரே என்று அலர்தோன்றியது உரைத்தாளென்பது. தலைமகள் தன் காதலர் அறனிலர் எனப் பிறர்கூறக்கேட்டலின் அது பொறாது, இறந்துபடுமெனவும், அலரேயன்றி அப்பழியும் நின்னைவந்து சூழுமெனவுங்கூறி வரைவுடன்படுத்தினா ளாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுமுடுக்கல் இது, கருப்பொருளால் நெய்தல்.

     (பெரு - ரை.) “கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்'' என்பது பற்றி உயிர்கழியினும் இன்னாது என்றாள். கானல் கூறினமையின் முதற்பொருளாலேயே இது நெய்தல் ஆதலறிக.

(227)