(து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்த தலைமகன் கேட்டு, விரைவிலே மணம் புரிந்துகொள்ளும் ஆற்றானே, தோழி தலைமகளை நோக்கித் தோழி! இனி மலைகிழவோன் நம்மைக்கூடித் தலையளி செய்யானோ? மற்று அவன்தான் இங்கு வாராதிருப்பது என்ன காரணமென்று கருதப்படுமென அழிந்துகூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் மேலைச் செய்யுள் விதியே யமையும்.
| என்னெனப் படுமோ தோழி மின்னுவசிபு |
| அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக் |
| கண்டூர்பு விரிந்த கனையிருள் நடுநாள் |
| பண்பி லாரிடை வரூஉம் நந்திறத்து |
5 | அருளான் கொல்லோ தானே கானவன் |
| வெறிகொள் சாபத்து எறிகணை வெரீஇ |
| அழுந்துபட விடரகத்து இயம்பும் |
| எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே. |
(சொ - ள்.) தோழி கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் - தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; வெறிகொள் சாபத்து எறிகணை வெரீஇ விடர் அகத்து அழுந்து பட இயம்பும் - அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; எழுந்து வீழ் அருவிய மலைகிழவோன் - குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னு வசிபு அதிர்குரல் எழிலி - மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; முதிர் கடன் தீரக் கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் - தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; பண்பு இல்ஆர் இடை வரூஉம் நந்திறத்து அருளான் கொல்லோ - இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; என் எனப் படுமோ - இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ? எ - று.
(வி - ம்.) வெறி - அச்சம்; பல ஒன்றோடொன்று மயங்கிக் கிடந்தமையின் வெறிகொள்கணையெனவுமாம். வசிபு - பிளந்து; வசிதல் - பிளத்தல். கடன்தீர்த்தல் - தன் கடமையைச் செய்து தீர்த்தல். ''யார் கடன் வைத்தாலும் மாரி கடன் வையாது'' என்னும் பழமொழியை நோக்கியுமறிக. வரூஉ : வந்து என்னும் இறந்தகால வினையெச்சத்திரிபு.
ஆற்றது ஏதத்துக்குக் கவலுகின்றாளாதலின் 'இனித் தாழ்க்காது யாம் வரைவொடு செல்லுதும்' எனக் கருதுவனெனக்கொண்டு என்னெனப் படுங்கொலென்றாள்.
உள்ளுறை:- யானை, வேட்டுவன் கணைக்கு வெருவி விடரகத்து முழங்குமென்றது தலைவி ஏதிலாட்டியர்கூறும் பழிச்சொல்லுக்கஞ்சி மனையகத்துப் புலம்பி வருந்தாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) இருள்நடுநாள் பண்பில் ஆரிடை வருகின்றான் ஆயினும் நந்திறத்து அருளான்கொல். அங்ஙனம் அருளாமைக்குக் காரணந்தான் யாதோ என்றாள் என்க. எனவே அவன் களவின்பமே காமுறுகின்றான் வரைந்துகொண்டு நந்திறத்து அருள்கிலன் என்றாளாயிற்று. இனி தலைவன் வரைந்துகொள்ளாமையான் தலைவி எய்தும் துயரத்தை உள்ளுறையாக வைத்துணர்த்தினள் என்க. வேழம் கணை அழுந்துபட இயம்பும் என மாறினுமாம். அருவி மழைபெய்யுங்கால் வீழ்தலும் எஞ்சியபொழுதில் மாறுதலும் போன்று இவனும் தான் விரும்பியபொழுதுவந்து அளிசெய்கின்றான். எஞ்சியபொழுதில் மறந்து மாறுகின்றான் என்பாள் எழுந்து வீழ் அருவிய மலைகிழவோன் என்றாள் என்றுங் கொள்க.
(228)