திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைவியாற்றாமையுணர்ந்த தோழி வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்கத்து நீட்டித்து வரையாதொழுகுதலும் தலைவி அதனை ஆற்றாளாகி வேறுபட அவ்வேறுபாடறியாத தலைமகனைத் தோழி இன்ன இன்ன காரணங்களால் நினக்கு அவ்வேறுபாடு தோன்றவில்லையெனக் கூறி வரைவுகடாவா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    
தொடிபழி மறைத்தலின் தோளுய்ந் தனவே 
    
வடிக்கொள் கூழை ஆயமோ டாடலின் 
    
இடிப்பு மெய்யதொன் றுடைத்தே கடிக்கொள 
    
அன்னை காக்குந் தொன்னலஞ் சிதையக்  
5
காண்டொறுங் கலுழ்த லன்றியு மீண்டுநீர் 
    
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைச் 
    
சிறுபா சடைய செப்பூர் நெய்தல் 
    
தெண்ணீர் மலரின் தொலைந்த 
    
கண்ணே காமங் கரப்பரி யவ்வே. 

    (சொ - ள்.) வடிக்கொள் கூழை தொடிபழி மறைத்தலிடுதோள் உய்ந்தன - வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னைப் பிறர் கூறும் பழிச்சொற்கஞ்சி வளைகளைக் கழலாதவாறு செறித்து மறைத்தலாலே தோள்கள் வாட்டந் தோன்றாவாயின!; ஆயமோப் ஆடலின் மெய்யது இடிப்பும் ஒன்று உடைத்து - அன்றியும் தன் ஆயத்தாரோடு விளையாட் டயர்தலால் உடம்பிற் களைப்பும் அவ் விளையாட்டினா லுண்டாகியதென நினைப்பதற் குரியதாயிரா நின்றது; கடிக்கொள அன்னை காக்கும் தொல் நலம் சிதையக் காண்தொறும் கலுழ்தல் அன்றியும் - காவன் மிகுதிப்பட அன்னையானவள் பாதுகாக்கும் இவளின் பழைய நலமெல்லாம் சிதையும்படி காணுந்தோறும் அழுதலல்லாமலும்; ஈண்டும் நீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறை - நெருங்கிய நீர்மிக்க முத்துக்கள் விளைகின்ற கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறையிலிருக்கும், சிறுபசு அடைய செப்பு ஊர் நெய்தல் தெள்நீர் மலரின்கண் தொலைந்த - சிறிய பசிய இலைகளையுடைய அழகமைந்த நெய்தலின் தெளிந்த நீரிலுள்ள மலர் போலக் கண்களே அழகு குலைந்தன; காமம் கரப்பு அரிய - அவை தாம் காமத்தைக் கரத்தலரியவாய் இராநின்றன; ஆதலின் நினக்கேற்றதொன்று செய்வாயாக!; எ - று.

    (வி - ம்.)வடித்தல்-வாரிமுடித்தல். காண்டல்-தலைவனையாதல் தன்னையாதல் காண்டல். செப்பு - செப்பம்; கடைக்குறை. இவளென்பதைத் தோன்றா எழுவாயாக்கி்க் கூழையையுடைய ஆயமென ஆக்கலுமொன்று. நீர்த் துறையெனக் கூட்டுக. கண் காமங் கரப்பரியவாதலின் அயலார் அலர் தூற்றினாரெனவும், அதனால் மெய்யிற் களைப் புண்டாய தெனவுங் கொள்க. காண்டொறுங் கலுழ்தல் - துன்பத்துப் புலம்பல்.

    கொற்கைநீரில் முத்து விளையுமென்றது நும் வதுவையால் தலைவியில்லகத்தார் மகிழ்ச்சியடைவா ரென்றவாறு. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) தோளின் மெலிவு தொடியை மாற்றி மாற்றிச் செறிய இடுதலான் மறைக்கப்படுகின்றது. மெய்யின் இடிப்பு ஆயமொடு ஆடலின் மறைத்தற்கு ஒரு காரணம் உடையதாதலின் அவ்வாற்றான் மறைக்கப்படுகின்றது. இடிப்பு-மெலிவு. ஒன்று-ஓரேது. காண்டொறும் என்பதற்கு - தனது தொன்னலம் சிதையக் காண்டொறும் என்பதே அமையும். காண்டல், தலைவனையாதல் தன்னையாதல் காண்டல் என்னும் உரையாசிரியர் விளக்கம் பொருந்தாமையுணர்க. அன்னையாற் பாதுகாக்கப்படும் தனது தொன்னலம் என்பது கருத்து. தெண்ணீர்ச் சிறுபாசடைய செப்பூர் நெய்தன் மலரின்கண் என இயைத்துக் கண்ணுக்கே அடையாக்குக. இன் ஒப்புப் பொருட்டாகிய ஐந்தனுருபு என்க. கண் கலுழ்தலன்றியும் நலந்தொலைவதனால் காமம் கரப்பு அரிய ஆயின. ஆதலால் நீ விரைந்து வரைந்து கோடல் வேண்டும் என வற்புறுத்தபடியாம்.

(23)