(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்டிச் சென்றானைத் தோழி நோக்கி ஊரனே ! என்னைக் கைவிட்டுப் பரத்தைக்கே அருள்செய்வாயாக, நின்னைக் காணும்போழ்து இனிமையாயிருக்கின்ற அவ்வொன்றே யெனக்கு அமையுமென மறுத்து வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, ''நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்'' (தொல். கற். 9) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக் |
| கயக்கணக் கொக்கின் கூம்புமுகை அன்ன |
| கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது |
| குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் |
5 | கயற்கணங் கலித்த பொய்கை ஊர |
| முனிவில் பரத்தையை என்துறந்து அருளாய் |
| நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப் |
| புதுவறங் கூர்ந்த செறுவின் தண்ணென |
| மலிபுனல் 1 பரத்தந் தாஅங்கு |
10 | இனிதே தெய்யநின் காணுங் காலே. |
(சொ - ள்.) முயப்பிடிச் செவியின் அன்ன பாசடை கயக்கணக் கொக்கின் கூம்பு முகை அன்ன கணைக் கால் ஆம்பல் - நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறு தண் போது குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் கயல் கணம் கலித்த பொய்கை ஊர - அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என் துறந்து முனிவு இல் பரத்தையை அருளாய் - என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்; நனி புலம்பு அலைத்தவேலை நீங்கப் புது வறங்கூர்ந்த செறுவின் - கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; தண் என மலி புனல் பரத்தந்து ஆ அங்கு - குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; நின் காணுங்கால் இனிது - வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்! எ - று.
(வி - ம்.) முயத்தல் - நெருங்கல்: முயா என்னும் குறியதனிறுதிச் சினைகெட்டு உகரம்பெறாதுநின்றது. கணை - திரட்சி. தெய்ய: அசைநிலை. இது தலைவியைத் தானாக்கூறியது.
நயந்து தலைவனைப் பிணித்தலின் முனிவில் பரத்தையை யென்றாள். இஃது அவன்வயிற் பரத்தைமையன்று. இங்கு வருதலுஞ்செய்யாய் என்றிருந்தேமுக்கு நீ வந்ததே முயக்கத்தினுங்காட்டிற் சிறந்ததாகக் கொண்டு மகிழுவேமென்னுங் கருத்தால் நின்னைக்காணுங்கால் இனிதே என்றாள். இது வாராது தாழ்த்தனையென்று இகழ்ந்ததாயிற்று.
இறைச்சி :- ஆம்பலம்போது வெள்ளிபோல மலர்ந்திருந்தாலும் வெள்ளியாகாதவாறுபோல, நீ தலைவிக்குச் செய்யுந் தலையளிபோலப் பரத்தைக்குச் செய்யினும் அவள் தலைவியாந்தன்மையளல்லள் காண் என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.
(பெரு - ரை.) ''கயக்கணக் கொக்கின் அன்ன கூம்புமுகை'' எனவும் 'நனிபுலம் பலைத்த வெல்லை நீங்க' எனவும் பாட வேற்றுமைகள் உண்டு. இப்பாடங்களே சிறப்புடையனவுமாகும். வறங்கூர்ந்த செறுவில் தண்ணென மலி புதுப்புனல் பரத்தந்தாங்கு என இயைத்துக் கோடல் இனிதாம். முனிவில் பரத்தை என்றது தலைமகள் நின்பாற் பெரிதும் ஊடலுடன் இருக்கின்றாள் அவள் நின்னை ஏற்றுக்கொள்ளாள் காண் என்பதைக் குறிப்பாலுணர்த்தியபடியாம். நிற்காணுங்கால் இனிது என்றது இகழ்ச்சி. அமிழ்து நாறும் ஆம்பல் குணக்குத் தோன்றும் வெள்ளியின் இருள்கெடவிரியும் என்ற வுவமை நினைந்து நினைந்து இன்புறற்பாற்று.
(230)
(பாடம்) 1. | பரத்தந் தாங்கு இனிது. |