(து - ம்.) என்பது, தலைமகன் வரைந்து கொள்ளாது களவொழுக்க மேற்கொண்டு நெடுநாள்காறும் வருதலையறிந்த தோழி, இவன் களவின் வருதலை இவள் ஆற்றாளென்பது கொண்டு ஒருநாள் அவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை நோக்கி 'நீ அவன்பால் காதல் மிக்குடையை யாதலின், என்சொல்லை ஏற்றுக்கொள்ளமாட்டாய்; ஆயினும் ஒன்று கூறுவேன் கே'ளென்று தொடங்கி அவன் சான்றோனல்லனாதலை அறிந்து கொள்ளென்று கூறி, உள்ளுறையால் அவள் செய்ய வேண்டுவதனையுஞ் சூழ்ந்து கூறிநிற்பது.
(இ - ம்.) இதுவுமது.
| கல்லாக் கடுவன் நடுங்கமுள் எயிற்று |
| மடமா மந்தி மாணா வன்பறழ் |
| கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும் |
| பெருங்கல் நாடனை அருளினை யாயின் |
5 | இனியென கொள்ளலை மன்னே கொன்னொன்று |
| கூறுவன் வாழி தோழி முன்னுற |
| நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி |
| ஆன்றோர் செல்நெறி வாழாச் |
| சான்றோன் ஆதல் நன்குஅறிந்தனை தெரிமே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; கல்லாக் கடுவன் நடுங்க முள்எயிற்று மட மா மந்தி - தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; மாணா வல் பறழ் கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் - தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெருங்கல் நாடனை அருளினை ஆயின் - பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என கொள்ளலை - இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; மன்கொன் ஒன்று கூறுவன் - அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; முன் உற நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்றோர் செல்நெறி வாழாச் சான்றோன் ஆதல் - இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நன்கு அறிந்தனை தெரிம்-நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்! எ-று.
(வி - ம்.) கோடு - கொடுமுடி. என - என்னுடைய வார்த்தைகள்; அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர். மன்: கழிவு. கொன் - பயன் இன்மை.
அன்னை கூட்டுவிக்குமுன் தன் சொல் தலைவிக்கு இன்பஞ் செய்தாற் போல இப்பொழுது செய்யாமையின் இனி என கொள்ளலை என்றாள்; இன்பஞ்செய்யாமைக்குக் காரணம் அலர் முதலாயினவற்றை அறிவுறுத்தி விலக்கத் தொடங்கினது. ஆன்றோர் சொல்லு நெறி பலரறிய வரைதலும் களவினைக்கடிதலும்; அந்நெறி வாழாச் சான்றோ னென்றது, பலரறிய மணந்து களவினைக் கடியாத சால்பிலானென்றிழித்துக் கூறியதாம்.
உள்ளுறை :- கடுவன் நடுங்க மந்தியும் பறழும் அடுக்கத்து மழையில் ஒளிக்குமென்றது, தலைமகன் வந்து காணாது மயங்குமாறு நீயும் யானும் இங்கொருசார்பில் மறைந்துகொள்வோம் என்றதாம்; எனவே களவுமுட்டுப் பாட்டினால் இனி வரைந்தெய்துவா னென்றதாயிற்று; மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) "தெளிமே" என்றும் பாடம்.
(233)