(து - ம்.) அஃதாவது, தலைவி தலைவனுக்குக் கற்புக்கடம் பூண்ட செய்தியைத் தோழி அறத்தொடு நிற்றலா லுணர்ந்த செவிலி நாற்றாய்க்கு அறத்தொடு நின்றுணர்த்தினளாக, அவ்வழித் தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங் கலங்களோடு வரைவு வேண்டிவிட, முன்விளைவறியாத தந்தையும் தமையன்மாரும் வரைவு மறுத்தாராக; அது கண்ட நற்றாய் தலைவி கற்புக்கடம் பூண்டமையை அவர் குறிப்பாலுணரும்படி அறத்தொடு நின்றது என்றவாறு.
(இ - ம்.) இதனை, “தாய்க்கும்வரையார் உணர்வுடம் படினே” (தொல். கள. 25) எனவரும் மாட்டேற்று விதியான் அமைத்துக் கொள்க.
| சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது |
| வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் |
| திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் |
| வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே |
5 | அஃதான்று, |
| அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
| கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் |
| பங்குனி விழவின் உறந்தையொடு |
| உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
(சொ - ள்.) நமரங்காள்!-; சான்றோர் வருந்திய வருத்தமும் - நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுமது வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கி - நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; இவள் ஆகம் வருமுலை - நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; திருமணி வரன்றும் குன்றம் கொண்டு - இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே ஏற்றுக்கொண்டு; வழங்கினோ - இவளை அந் நம்பிக்கே வழங்கின் பெரிதும், நன்று - நன்றாகும்; அஃதான்று - அங்ஙனமின்றி; அடைபொருள் கருதுவிர் ஆயின் - நம் மகளின் முலைக்கு விலையாக அவர் தரும் பொருளைச் சீர்தூக்குவீராயின்; கழுமலம் குடையொடு தந்த நல்தேர்ச் செம்பியன் - கழுமலப்போரின்கண் மாற்றாரை அவர்தங் குடையோடே அகப்படுத்திய வெற்றியையுடைய நல்ல தேரினையுடைய சோழன் தலைநகராகிய; பங்குனி விழவின் உறந்தையொடு - பங்குனித்திங்களிலே விழாவெடுக்கும் உறந்தையோடே கூடிய; உள்ளி விழவின் வஞ்சியும் சிறிது - உள்ளி விழா நிகழ்தற்கிடனான சேரன் தலைநகராகிய வஞ்சிதானும் ஈடில்லாச் சிறிதாய்விடுங் கண்டீர்: ஆதலால் இச் சான்றோர் தரும் பொருளை ஏற்று இவளை அந் நம்பிக்கே ஈதல் நன்று; என்பதாம்.
(வி - ம்.) சான்றோர் - தலைவனால் விடப்பட்டு அருங்கல முதலியன கொணர்ந்துள்ள பெரியோர். அவர் வருத்தமாவது: அருங்கல முதலியவற்றோடு தம்மில்லிற்கு நடந்து வந்த வருத்தம் என்க. தான் வேறு குடிப்பிறப்புடையளாதலின் தந்தையையும் தமையன்மாரையும் வேறுபடுத்தி நுமதுகுடி என்றாள். உயர்ச்சிக்கு ஓர் எல்லைகாட்டுவாள், வான்தோய்வு அன்ன குடிமை என்றாள். இந்நம்பிக்கு நும்மகளை வழங்கீராயின் நுங்குடி வடுப்படும் என்பாள் நுமது வான்தோய் வன்ன குடிமையும் நோக்கி என்றாள். எனவே, தலைவி கற்புக்கடம் பூண்ட செய்தி இதனால் குறிப்பாக உணர்த்தப்பட்டமையும் உணர்க. "திருமணி வரன்றும் குன்றம் கொண்டு" என்றமையால் அச்சான்றோர் தலைவனுடைய அக்குன்றத்தை முலைவிலையாக (பரியமாக)க் குறித்தனர் என்பது பெற்றாம். ஆகம் வருமுலை என மாறுக. அடைபொருள் என்றது - அம் முலைக்குத் தகுதியான பொருள் என்றவாறு. செம்பியன் - சோழன். உறந்தை - உறையூர். வஞ்சி - கருவூர். பங்குனி விழா, உள்ளிவிழா என இரண்டு விழாவுண்மை இதனாற் பெற்றாம்.
உறந்தையோடு கூடிய வஞ்சி என்றமையால் சிறிது என ஒருமையின் முடித்தாள். எனவே இவள் முலைக்கு உறந்தையும் வஞ்சியுமாகிய இரண்டு தலைநகரங்களுமே விலையாகமாட்டா என்றாளாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - அறத்தொடுநிலை மாட்சிமைப்படுதல்.
இப் பாட்டு இறையனார் அகப்பொருள் 28 ஆம் சூத்திர உரையில் மேற்கோளாக வருகிறது.
(234)