(து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வரக்கண்டும் அவன் வாராமையைக் கருதிய தலைவி மேகத்தை நோக்கி, "மேகமே, அவர்நிலையைக் கூறக்கேளென்று நீ இங்கு வருதல் சால்புடையதன்று கண்டாய், நின்குரல் பாம்பின் படத்தை மழுங்கச் செய்வதன்றி அவர் நெஞ்சைக் கனியச் செய்யாமையின் இனிய வல்ல மன்"னென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.
| வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங் |
| கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப |
| வண்டுவாய் திறப்ப விண்ட பிடவ |
| மாலை அந்தி மாலதர் நண்ணிய |
5 | பருவஞ் செய்த கருவி மாமழை |
| அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல் |
| சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்றுடன் |
| உரவுரும் உரறு நீரின் பரந்த |
| பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட |
5 | கனியா நெஞ்சத் தானும் |
| இனிய அல்லநின் இடிநவில் குரலே. |
(சொ - ள்.) வறம் கொல வீந்த கானத்துக் குறும் பூங்கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப - கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டு வாய்திறப்ப விண்டபிடவ அந்திமாலை - வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; மால் அதர் நண்ணிய பருவம் செய்த கருவி மாமழை - யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; அவர்நிலை ஈங்கு அறி என வருதல் - நீ "அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள்" என்று வருதல்; சான்றோர்ப் புரைவது அன்று - சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; உடன் மான்று நின் இடி நவில்குரல் உரவு உரும் உரறும் நீரின் - ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரந்த பாம்பு பைமழுங்கல் அன்றியும் - பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாண்ட கனியா நெஞ்சத்தானும் இனிய அல்ல - மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல; எ - று.
(வி - ம்.)வறம் - கோடை. மோ : முன்னிலையசை. பிடவு இலையுதிர்த்துத் தூர்தெரியாதபடி பூத்தலால் பட்ட கானத்தைப் பூச்சூடிய மகளிரை யுவமித்தார்.
அவரை உடனழைத்து வருதலின்றி அவர் நிலையை நீ யறிவையோ எனக் கூறுதலால் என் காமநோயை நீக்குந் தன்மையைக் கருதுகின்றிலை யாதலின் சான்றோர் செய்கையை நின் செய்கை ஒவ்வாதென்றாள்; சான்றோர் செய்கை "பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி அறனறிதல், சான்றோர்கட் கெல்லாங் கடன்" (கலி. 139) என்றதனாலறிக. குறித்த பருவத்து வாராது தாழ்த்தமையின் பாம்பின் நஞ்சுடைத் தலையினும் அவர் நெஞ்சங் கொடிதென்பாள் கனியா நெஞ்சத்தானுமென்றாள்.
மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) நின்குரல் கேட்டும் எம்பெருமான் கனியா நெஞ்சம் உடையராதலான் நீ எனக்கு இனியை யல்லை நின்குரல் பாம்பு முதலிய சிற்றுயிர்களை வருத்துவதே யன்றி எம் போல்வார்க்கு இனிய வல்லகாண் என்றவாறு. உரவு - வலிமை. உரும் - இடி. நீரின் - நீர்மையாலே. பரந்த பை என இயைத்தலுமாம்.
(238)