திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் ஓரிடத்தில் வந்து மறைந்திருப்பதை யறிந்த தோழி தங்களுக்குண்டாகிய பழிச்சொல்லை அவன்கேட்டு விரைய வரைந்து கொள்ளுமாற்றானே "யாம் இதுகாறும் சேர்ப்பனுக்குப் பொருந்தி நடந்துகொண்டோ மில்லை; அங்ஙனமாக இப்பொழுதே எம்மை நோக்கி "அக்காதலனை யணைத்து முயங்குவாய்" என்று கூறுகின்ற இவ்வூர் யாம் ஏதாவது களவொழுக்கத்துக்கு உரியதைச் செய்துவிட்டால் இனி என்ன பாடுபடுமோ” வென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .................... அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாற் கொள்க.

    
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய 
    
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் 
    
இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி 
    
அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் 
5
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின் 
    
ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு நெய்தற் 
    
புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் 
    
மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு 
    
அமைந்துதொழில் கேட்டன்றோ இலமே முன்கை 
10
வார்கோல் எல்வளை உடைய வாங்கி 
    
முயங்கெனக் கலுழ்ந்த இவ்வூர் 
    
எற்றா வதுகொல்யா மற்றொன்று செயினே. 

     (சொ - ள்.) ஞான்ற ஞாயிறு குடமலை மறைய - மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் - மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி - தாம் வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் காமர் சிறுகுடி - ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம் வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல் நெறி வழியின் ஆய்மணி பொதி அவிழ்ந்து ஆங்கு - செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தல் புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் - நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு - வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; அமைந்து தொழில் கேட்டன்று இலம் - யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; முன் கை வார் கோல் எல் வளை உடைய வாங்கி முயங்கு என - அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; கலுழ்ந்த இவ் ஊர் - புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் மற்றொன்று செயின் எற்று ஆவது கொல் - யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ? எ - று.

     (வி - ம்.) வரைந்துகொண்டு அவற்குக் குற்றேவலிழைக்கும் பயனைப்பெற்றேம் இல்லையேயென்றிரங்குவாள் தொழில் கேட்டன்றோவிலமே யென்றாள். அவனொடு கூட்டமுண்மையை ஊரறிந்ததென அறிவுறுத்துவாள் வாங்கி முயங்கென இவ்வூர் கலுழ்ந்ததென்றாள். இதனால் இனி வரையாது தாழ்ப்பின், இறந்துபடுவதல்லது வேறு செய்யக் கடவதின்மையும் அதனால் அவன் பழியெய்துகின்ற உண்மையுங் கூறினாளாயிற்று.

     உள்ளுறை :- குடித்து மயங்கிய பரதவர் தாம் பெற்ற பெரிய மீனை எளிதிலே மாறி நெறியிலுள்ள நீலமலரை மிதித்துச் செல்லுவரென்றது, காம மயக்கங் கொண்ட காதலன் தான் அரிய பொருளை எமரிடத்துக் கொடுத்துத் தலைவியைப் பெற்று மணந்து ஊரார் எடுத்த அலரைத் தாழ மிதித்து அடக்கித் தன்னூர் கொண்டு புகுவானாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை.) இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாயபடியாம். மற்றொன்று செயின் என்றது, பகற்குறியே யன்றி இரவுக் குறியும் கூறி அவனை அழைத்து அவன் விரும்பியவாறு ஒழுகுவமாயின் என்றவாறு.

(239)