திணை : பாலை.

    துறை : இது, பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.

    (து - ம்.) என்பது, பொருள்வயிற்பிரிவேனென்று தலைவன் கூறக்கேட்ட தோழி நன்றெனக் கூறினாளாக, அதனை யறிந்த தலைவி தோழியை நோக்கி ஆடவர் பொருட் ககலுதல் பண்புதான் ஆகலின் அதனை மறாமலுடன்பட்டது நன்றென உவந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை.

  
"கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை  
  
 வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக்  
  
 காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் 
  
 ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்"    (தொல்-கற்- 6) 

எனவரும் விதிகளுள் உவத்தலின்கண் அமைத்துக்கொள்க.

    
பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்  
    
டுடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின் 
    
ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு  
    
கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் 
5
வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச் 
    
சேறும் நாமெனச் சொல்லச் சேயிழை  
    
நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே  
    
செயல்படு மனத்தர் செய்பொருட் 
    
ககல்வ ராடவ ரதுவதன் பண்பே. 

    (சொ - ள்.) சேயிழை - சேயிழாய்!; பார் பக வீழ்ந்த வேர்விழுக் கோட்டு - நிலம் பிளவுபடுமாறு இறங்கிய வேரும் பெரிய கிளைகளும்; உடும்பு அடைந்து அன்ன பொரி உடை நெடு விளவின் - அடியில் உடும்புகள் செறிந்தாற்போன்ற பொரிந்த செதில்களும் உடைய நெடிய விளாமரத்தின்; கோட்டு மூக்கு இறுபு கம்பலத்து அன்ன பைம் பயிர் ஆட்டு ஒழி பந்தின் தாஅம்-கிளையில் மூக்கு ஊழ்த்து விழுந்து கம்பலத்தை விரித்தாலொத்த பசிய பயிரின் கண்ணே ஆடுதலொழிந்த பந்து கிடப்பது போலப் பரவியிருக்கும்; வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடை-அவ்விளாம்பழங்களையே உணவாகவுடைய அயனாட்டிலே செல்லுதற்கரிய பாலைவழியில்; நாம் சேறும் எனச் சொல்ல - யாம் செல்லா நிற்பேமென்று தலைவர் கூறலும்; நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனை - அது நல்லதொரு காரியமென்று விருப்பத்தோடு கூறினை! ஆதலின் நீ நல்லதொன்றனைச் செய்தனைகாண்!; ஆடவர் செயல்படு மனத்தர் செய் பொருட்டு அகல்வர்-ஆடவர் வினைமேற்கொண்ட உள்ளத்தராய்ப் பொருளீட்டுதற்கு அகலா நிற்பர்; அது அதன் பண்பு - அங்ஙனம் அவர் அகலும்பொழுது மறுத்துக் கூறாமல் உடன்படுவதே அதற்குரிய பண்பாகும்.

    (வி - ம்.)வெள்ளில் - விளாமரம்; வெள்ளில் பயிரிலே பரவுமென்றதனால் தலைமகன் முதுவேனிற் பருவத்துப் பிரிந்தானென்க. அவன் குறித்த பருவம் வருந்துணை ஆற்றியிருத்தல் கற்புடை மகளிர் கடனாதலின், தலைவி உவந்து கூறினாளாயிற்று. இஃது அருண்மிகவுடைமை.

    இறைச்சி :- விளங்கனியே உணவாகவுடையராயிருந்தும் அவை எடுப்பார் மிக்கின்மையாற் பயிரிற் பரவிக்கிடக்குமென்றது செல்லுந் தேத்து ஆண்டுள்ளாரும் பொருள் வேட்கையராயினும், ஈட்டுவார் மிக்கின்மையின் நங்காதலர் அங்கே சென்றவுடன் விரைவிலீட்டுமாறு கிட்டுவதாகு மென்றதாம். எனவே, குறித்த பருவத்துக் காதலர்வருவராதலின் யான் வருந்தேனெனவும் இதனை யறிந்தே நீ அவரைத் தாழ்க்காது விடுத்தனை யெனவும் குறிப்பாற் கூறினாளாயிற்று. கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - உவகை. பயன் - ஆற்றியிருத்தல். இதனைக் கற்பிற் றிரியாமையின் உவகைப்பாற் படுத்துவர் நச்சினார்க்கினியர்; (தொல்-சூ- 147, உரை.)

    (பெரு - ரை.) இதனால் இன்பத்தினுங்காட்டில் தன் கடமையாகிய அறத்தையே பெரிதும் பேணும் தலைவியின் மாண்பு புலனாதல் அறிக.

(24)