(து - ம்.) என்பது, உள்ளத்தாலே பொருள் கருதப்படுதலும் தலைவியைப் பிரிதல் ஆற்றாத தலைமகன் "நம் காதலியின் முயக்கத்தை வெறுத்துச் செல்லுதலால் என்னுடம்பு துயில் கொள்ளாது இடையீடுபடுவதாயினும் செல்லுங் காடு மலைபோல அச்சத்தைத் தாரா நின்றது; அத்தகைய காட்டினைப் படைத்த கொடியோன் தானும் அதன்கண்ணே சென்று நனி வருந்துவானாக" என வருந்திக் கூறாநிற்பதுமாகும்.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| ஐதேகு அம்மஇவ் வுலகுபடைத் தோனே |
| வையேர் வாலெயிற்று ஒண்ணுதற் குறுமகள் |
| கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி |
| ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை ஆகம் |
5 | துயிலிடைப் படூஉந் தன்மைய தாயினும் |
| வெயில் வெய்துஉற்ற பரலவல் ஒதுக்கில் |
| கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி |
| ஆன்வழிப் படுநர் பத்தலதோண்டிய |
் | யானை இனநிரை வௌவும |
்10 | கானந் திண்ணிய மலைபோன் றிசினே. |
(சொ - ள்.) (துறை. 1) வை ஏர் வால் எயிற்று ஒள்நுதல் குறுமகள் - கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் - நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் - இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயில் வெய்து உற்ற பரல் அவல் ஒதுக்கில் கணிச்சியின் குழித்த கூவல் நண்ணி - வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் - பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை இனம் நிரை வௌவும் - யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; கானம் திண்ணிய மலை போன்றிசின் - அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; இவ் உலகு படைத்தோன் - அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; ஐது ஏகு - அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக! எ - று.
(வி - ம்.) அவல் - பள்ளம். கணிச்சி - குந்தாலி. இடைப்படல் - இடையீடுபடுதலுமாம். திருகியென்பதைத் திருகவெனத் திரிக்க. பத்தல்போலச் சிறிதாகத் தோண்டப்படுதலிற் பத்தலென்றார்; இது கிணற்றினீரை யெடுத்து ஊற்றி ஆனிரையை உண்பித்தற்குத் தோண்டப்படுவது.
இறைச்சி :- ஆனிரை யுண்பிக்கும் வண்ணம் ஆயர் கூவலருகிலே பறித்த குழியாகிய பத்தலி னிரப்பிவைத்த நீரை யானையினம் உண்ணா நிற்கும் என்றது, இப்பொழுது தலைவனாலே துய்க்குமாறு சமைந்த என் நலனைப் பசலையுண்டொழிக்கு மென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(2) உரை :- நெஞ்சமே! குறுமகளை முயங்கு முயக்கம் வேண்டா என்று வெறுத்து நீங்குதலானே பருத்த கொங்கையை யுடையாளது மெய்துயிலின்றி வருந்துவதாயினும், யான் இப்பொழுது செல்லும் கானமானது மலைபோல அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அக்கானம் பரவிய பாலைநிலத்தைப் படைத்த கொடிய இறைவன்தானும் அதன் கண்ணே மெத்தெனச் சென்று துன்புறுவானாக; எ - று.
இறைச்சி :- யான் துய்க்கவேண்டிய நலத்தைப் பசலையுண்டொழிக்கும் என்றதாம், மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய அச்சம்பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) கானம் மலைபோன்றிசின் என்றது, காடு மலை போன்று கடத்தற் கரியதாகத் தோன்றுகின்றது என்றவாறு. இது பண்புவமை. உலகியலினும் செயற்கரிய செயல் ஒன்றனைக் கருதி அஃது எனக்கு மலைபோலத் தோன்றுகின்றது எனல் காண்க. "வீங்குமுலை யாகம் துயிலிடைப் படூஉந் தன்மையது" என்றது, அன்பினது அகலம் கானம் மலைபோன்றது என்றது, தாளாண் பக்கம். அஃதாவது - முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியோடு அப்பொருட்பிரிவு பொருந்தாமையாம். இவ்வுலகு என்றது இந்தப் பாலை நிலத்தை என்றவாறு. நிலத்தின் பகுதிகளையும் தனித்தனி உலகு என்றே கூறும் மரபினை, "மாயோன் மேய காடுறையுலகமும்" (தொல். அகத். 5) என்னும் நூற்பாவனும் உணர்க.
(240)