(து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலால் மெலிந்த தலைவி "சோலை தோறும் குயில்கள் புணர்ந்தீர் பிரியாதீரென்பதுபோலக் கூவா நிற்கும் இவ் விளவேனிற் காலத்திலே பிரிதல் இயல்பென்றால் அறத்தினும் பொருளே அருமையது போலும்" என்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 4) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.
| தேம்படு சிலம்பில் தெள்ளறல் தழீஇய |
| துறுகல் அயல தூமணல் அடைகரை |
| அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப் |
| பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில் |
5 | கவறுபெயர்த் தன்ன நில்லா வாழக்கையிட்டு |
| அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக் |
| கையறத் துறப்போர்க் கழறுவ போல |
| மெய்யுற இருந்து மேவர நுவல |
| இன்னா தாகிய காலைப் பொருள்வயின் |
10 | பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் |
| அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே. |
(சொ - ள்.) தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய துறுகல் அயல தூ மணல் அடை கரை - தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தெளிந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் பொதும்பு தோறு அல்கும் - அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; பூங் கண் இருங்குயில் கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கைஇட்டு - சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; அறிவு உடையீர் அகறல் ஓம்புமின் - "அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!"; எனக் கையறத் துறப்போர்க் கழறுவபோல மெய் உற இருந்து மே வர நுவல - என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; இன்னாது ஆகிய காலைப் பொருள் வயின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு எனின் - பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அறத்தினும் மன்ற பொருள் அரிது - அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தெளிவாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு; எ - று.
(வி - ம்.) பிரிந்த வழிக் குயில்கூவுமோசை தனக்கு இன்னாமை செய்தலில் அவை இங்ஙனமே கூவுகின்றன வென்றாள், "ஊடினீரெல்லா முருவிலான் றன்னாணை, கூடுமி னென்று குயில்சாற்ற" என்றார் பிறரும். அடைந்தாரைக், காப்பேமென்று முன்னர்க் கூறியபடி பின்னர்க் காப்பதே அறமெனப் படுவது. அதனைக் கைவிட்டுப் பொருள் பெரிதெனப் பிரிந்தார் ஆதலின் அறத்தைக் கைவிட்டார்க்குப் பிற கைகூடாகவே யென்று இரங்கியவாறு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) பொருள்வயிற் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு; ஆற்றியிருப்பது மகளிர் கடமை என்று ஆற்றுவிக்குந் தோழியை நோக்கிக் கூறுகின்றாள் ஆகலின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் எனத் தோழி கூற்றைக்கொண்டு கூறுபவள் இயல்பாயினும் இன்னாதாகிய இப் பருவத்தே பிரிதல் அறமாமோ? என்று நொந்து கூறுகின்றாள் என்க. "பிரியல்" என்றும் பாடம்.
(243)