(து - ம்.) என்பது, களவொழுக்கத்தை மேற்கொண்டிருந்து மணம்புரியாது வினைமேற்செல்லுந் தலைமகனைத் தோழி நோக்கி, "நீ அருளினும் அருளாது விடினும் நின்வழி யொழுகுபவளாகிய தலைமகளது நெற்றியிலுண்டாகிய பசலை நோய்க்கு நீயே மருந்தென்பதறிந்து அப்பாற் செல்வாயாக" என்று செலவுமறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, " ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்னம் விதி கொள்க.
| தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் |
| கொன்ற யானைச் செங்கோடு கழாஅ |
| வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி |
| எஃகுறு பஞ்சிற் றாகி வைகறைக |
்5 | கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ |
| நல்கா யாயினும் நயனில செய்யினும் |
| நின்வழிப் படூஉமென் தோழி நன்னுதல் |
| இருந்திறை கூடிய பசலைக்கு |
| மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே. |
(சொ - ள்.) தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங் கோடு கழாஅ - முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வழி துளி பொழிந்த இன் குரல் எழிலி எஃகு உறு பஞ்சிற்று ஆகி - வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; வைகறைக் கோடு உயர் நெடுவரை ஆடும் நாட - விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ நல்காயாயினும் நயன் இல செய்யினும் - நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் வழிப் படூஉம் என் தோழி நல் நுதல் - நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து இறை கூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை செல்மே - இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக! எ - று.
(வி - ம்.)எஃகுதல் - வில்லாலடித்தல். நயனில் - விரும்பாதன. இறைகூடுதல் - நிலைமிகுதல்.
இல்லற நிகழ்த்த நின்னுள்ளம் போல் ஒழுகுபவளென்பாள், நின் வழிப்படூஉம் என் தோழியென்றாள். வரைந்து பிரியாதுறைந்து பலகாலும் முயங்கிய வழியே பசலைமென்மெலத் தணியுமென் றறிவுறுத்துவாள், பசலைக்கு மருந்து பிறிதில்லையென்றாள். இது, பசலைபாய்தல்.
உள்ளுறை :-புலியைக்கொன்ற யானையின் கோடு கழுவும்படி மழைபொழிந்த மேகம் விளர்த்து வைகறையில் வரைமீ தியங்குமென்றது, வேற்றரசைவென்ற நின்னுடைய காமந்தணியும்படி பெரிய இன்பத்தைக் கொடுத்த தலைவி நீ கைவிடுதலாலே பின்பு விளர்த்துக்காட்டும் என்பதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) இது, தலைவியின் பசலைநோய் அறிவுறுத்துக் காலம் நீளின் இவள் இறந்துபடுதலும் கூடும் ஆதலால் நீட்டியாது விரைந்து வந்து இவளைப் பாதுகாத்துக்கொள் என ஓம்படுத்துரைத்ததாம். அழிதுளி என்று கண்ணழித்து மிக்க துளி என்று பொருள்கொள்ளுதலுமாம். நயனில செய்தல் - வரைதற்கு முயலாமையும் ஒருவழித் தணத்தலும் பிறவுமாம். நின்வழிப்படூஉம் இவள் என்றது நீ விரும்பி யாங்கு பகற்குறி இரவுக்குறி யிடங்களிலே வந்து மகிழ்ச்சி விளைத்தவள் என்றவாறு.
(247)